ஜனாதிபதி தேர்தலில் வெவ்வேறு நிற சீட்டு

தினமலர்  தினமலர்
ஜனாதிபதி தேர்தலில் வெவ்வேறு நிற சீட்டு

புதுடில்லி:'ஜனாதிபதி தேர்தலில், எம்.பி.,க்களுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் வெவ்வேறு நிற ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்படும்' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம், 17ல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது. 28ம் தேதியுடன், மனு தாக்கல் முடிகிறது.

இந்த தேர்தலில், எம்.பி.,க்கள் மற்றும் அனைத்து மாநில, எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப் போட உள்ளனர். ஓட்டுச் சீட்டு முறையில்தான் தேர்தல் நடத்தப்பட உள்ளது. எம்.பி.,க்களுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும், வெவ்வேறு நிறத்தில் ஓட்டுச் சீட்டு வழங்கப்பட உள்ளன.

இது பற்றி தேர்தல் கமிஷன் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், 28ல் முடிகிறது. தே.ஜ., கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் தனித்தனி வேட்பாளர்களை நிறுத்தி, மனுவை யாரும் வாபஸ் பெறவில்லை என்றால், ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கும்.எம்.பி.,க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.,க் களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்படும்.

அருணாச்சல், பீஹார், சத்தீஸ்கர், ஹரியானா, ஹிமாச்சல், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், டில்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கான ஓட்டுச் சீட்டுகளில், வேட்பாளர்களின் பெயர் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

ஆந்திரா, அசாம், கோவா, குஜராத், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழகம், தெலுங்கானா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், ஹிந்திக்கு பதில், தங்கள் மாநில மொழியில் அச்சடிக்க கோரிக்கை விடுத்துள்ளன. அதனால், இந்த ஓட்டுச்சீட்டுகள் மட்டும், அந்தந்த மாநில மொழிகளில் அச்சடிக்கப்படும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில், ஹரியானாவில், 'இங்க்' பிரச்னை ஏற்பட்டது. அதனால், இம்முறை, 'சிறப்பு பேனா'க்கள் வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. ஓட்டளிக்க செல்லும் போது, ஓட்டுச்சாவடியில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களிடம் இந்தப் பேனா வழங்கப்படும். இந்தப் பேனாவை பயன்படுத்தி தான் ஓட்டளிக்க வேண்டும்.

எம்.பி.,யின் ஓட்டு மதிப்பு, 708 ஆக இருக்கும். ஆனால், எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு, மாநிலத்துக்கு மாநிலம், மக்கள் தொகைக்கு ஏற்ப மாறும். லோக்சபாவின், 543 எம்.பி.,க்கள், ராஜ்யசபாவின், 233 எம்.பி.,க்கள், அனைத்து மாநிலங்களிலும் உள்ள, 4,120 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட உள்ளனர்.

அந்தந்த மாநில தலைமை செயலகங்கள் மற்றும் பார்லிமென்ட் வளாகத்தில், ஓட்டுச்
சாவடிகள் அமைக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு நடக்கும். ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும், டில்லிக்கு எடுத்து வரப்பட்டு, அடுத்த மாதம், 20ல், ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

ரொக்கமாகவே செலுத்த வேண்டும்


செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், டிஜிட்டல் மூலம் பண பரிவர்த்தனை செய்வதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், டிபாசிட் தொகையைான, 15 ஆயிரம் ரூபாயை, ரொக்கமாகவே செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது பற்றி தேர்தல் கமிஷன் அதிகாரி கூறியதாவது:

ஜனாதிபதி தேர்தல் விதிப்படி, வேட்பு மனுதாக்கல் செய்பவர்கள், தேர்தல் அதிகாரியிடம், மனு தாக்கல் செய்யும் போதே, டிபாசிட் தொகையை ரொக்கமாக செலுத்த வேண்டும். தேர்தல் அதிகாரியுடன், வங்கி அதிகாரி ஒருவரும் இருப்பார். அவர், பணத்தை வாங்கி, எண்ணி சரிபார்ப்பார். ரிசர்வ் வங்கியில் பணத்தை செலுத்திவிட்டு, அதன் ரசீதை, தேர்தல் அதிகாரியிடம் வேட்பாளர்கள் வழங்கலாம். ஆனால், மின்னணு முறையிலோ, காசோலையாகவோ டிபாசிட் தொகையை செலுத்த முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை