ஜூலை 1 ஆம் தேதி ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை அமல்படுத்த மாட்டோம்: ஜம்மு காஷ்மீர் அரசு

PARIS TAMIL  PARIS TAMIL
ஜூலை 1 ஆம் தேதி ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை அமல்படுத்த மாட்டோம்: ஜம்மு காஷ்மீர் அரசு

நாடு முழுவதும் ஒரேவிதமான மறைமுக வரியாக ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரிவிதிப்பு முறை வரும் ஜூலை மாதம் 1–ந் தேதி முதல்  நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் ஜிஎஸ்டியை அமல்படுத்த மாட்டோம் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மாநில பொதுப் பணித் துறை அமைச்சர் நயீம் அக்தர், ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை மற்ற மாநிலங்களில் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ஆனால், அந்த வரிவிதிப்பு முறை காஷ்மீரில் அந்த தேதியில் அமல்படுத்த மாட்டாது.

வர்த்தகர்கள், பிரிவினைவாதிகள், எதிர்க்கட்சியினர் ஆகியோர் ஜிஎஸ்டியை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கூறும் கருத்துக்களை அனைத்துக் கட்சி குழு கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யும். ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுடன் அதுகுறித்து விரிவான பேச்சுவார்த்தையும், கலந்தாலோசனையும் நடத்தப்படும். அதற்காகவே அண்மையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.

நுகர்வோரின் நலன்களைக் கருத்தில் கொண்டே அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படும் வரை ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட மாட்டாது. அரசியலைப்புச் சட்டப்படி ஜம்மு-காஷ்மீருக்கு சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே, ஜிஎஸ்டியை ஜூலை 1-ஆம் தேதியே மாநிலத்தில் அமல்படுத்த வேண்டியது கட்டாயமல்ல” என்றார்.

 

மூலக்கதை