பாலாற்றின் குறுக்கே 36 அடி உயரத்தில் ஆந்திர அரசின் புதிய தடுப்பணை தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

PARIS TAMIL  PARIS TAMIL
பாலாற்றின் குறுக்கே 36 அடி உயரத்தில் ஆந்திர அரசின் புதிய தடுப்பணை தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

வாணியம்பாடி அருகே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே 36 அடி உயரத்தில் புதிய தடுப்பணையை கட்டி வருகிறது. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

36 அடி உயர தடுப்பணை

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த புல்லூர் பகுதியில் பாலாறு தொடங்கி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு ஏற்கனவே 32 தடுப்பணைகளை கட்டியுள்ளது.

இந்த நிலையில் ஆந்திர அரசு, வாணியம்பாடி, கங்குந்தி அருகில் உள்ள பாலாறு கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே 50 அடி உயரத்தில் மேம்பாலம் அமைக்கிறோம் என்ற பெயரில் கடந்த 32 நாட்களாக பணிகள் நடந்துவருகிறது. இதில் 50 அடி உயரத்திற்கு மேம்பாலம் அமைவதால் கீழே சுமார் 36 அடி உயரத்துக்கு பாலத்தின்கீழ் தடுப்பணை போல் அமைத்து தண்ணீரை தேக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகளும் நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் அதிர்ச்சி

பாலாற்றின் குறுக்கே பொகிலிரேவிலும் 2 தடுப்பணைகள் உள்ளன. இதில் ஒரு தடுப்பணையின் உயரத்தை 15 அடியில் இருந்து 36 அடியாக உயர்த்திக்கட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. இவைதவிர கங்குந்திக்கும், கணேசபுரத்துக்கும் இடையே மற்றொரு தடுப்பணையும் பாலாற்றின் குறுக்கே அமைக்கவுள்ளனர்.

இந்த பணிகள் அனைத்தையும் 3 மாதங்களில் முடிக்க உள்ளனர். ஆந்திர அரசு நூதன முறையில் மேம்பாலம் என்ற பெயரில் புதிய தடுப்பணை அமைப்பது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தடுத்து நிறுத்துக

இந்த அணைகள் கட்டப்படுவதால் தமிழகத்தின் வடமாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வடசென்னை ஆகிய 5 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இதனை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

மூலக்கதை