காஷ்மீரில் ராணுவம் அதிரடி பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீரில் ராணுவம் அதிரடி பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிய 4 தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். காஷ்மீரின் ட்ரால் பகுதியில் நேற்று இரவு ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், ராணுவ வாகனத்தின் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். சுதாரித்துக்கொண்ட வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில், அங்கிருந்து தீவிரவாதிகள் தப்பினர். அதிர்ஷ்டவசமாக வீரர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

இதையடுத்து தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. அவர்கள் ராம்பூர் செக்டாரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

அந்த இடத்தை ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தனர். வீரர்களை கண்டதும் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.



இருதரப்பினர் இடையே விடியவிடிய கடும் சண்டை நடந்தது. இந்நிலையில், இன்று காலை 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து நவீன ரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காஷ்மீரில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி செயல்பட்டு வரும் நிலையில், தீவிரவாதிகளின் ஊடுருவலும் அதிகரித்துள்ளது.

சமீபகாலமாக ராணுவ, போலீஸ் முகாம்கள் மற்றும் வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தசூழலில், எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

.

மூலக்கதை