2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 2,305 சதுர கி.மீ. காடுகள் காணாமல் போகும்: இஸ்ரோ ஆய்வில் தகவல்
டெல்லி: வரும் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 2,305 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காடுகள் காணாமல் போகும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், அந்த மான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட இடங்களில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலப்பரப்பு மாற்றத்தை அறிவதற்கான மென்பொருளைப் பயன்படுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் காடுகளின் பரப்பளவு பற்றி ஆய்வு நடத்தினர்.இதில், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவு உள்ளிட்ட இடங்களில் கடந்த 2005 முதல் 2013-ம் ஆண்டு வரை காடுகளை அழிக்கும் நடவடிக்கைகள் 0.3 சதவீதத்துக்கும் அதிகமாக நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 1880-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி காடுகளின் பரப்பளவு 10.42 லட்சம் சதுர கிலோ மீட்டராக இருந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான வனப்பகுதிகள் தனியாரிடம் இருப்பதும், வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு, சாகுபடி பரப்பளவாக மாற்றப்பட்டு வருவதும் காடுகளின் அழிப்புக்கு முக்கியக் காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன. முக்கியமாக, வனப்பகுதிகளில் பெரும்பாலான பாதுகாக்கப்பட்ட இடங்கள் மூலம் காடுகள் அழிப்பு குறைந்து வருவதும் தெரிய வந்துள்ளது. காடுகளை அழிவில் இருந்து மீட்கும் நடவடிக்கையில் இறங்க இந்த ஆய்வு உதவிகரமாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.