பெங்களூரு கனமழையில் கால்வாய் வெள்ளத்தில் ஒருவர் பலி
பெங்களூரு: பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.. பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு காற்று மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் நகர் முழுவதும் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மரங்கள் முறிந்ததில் 200க்கும் அதிகமான கிளிகள் உயிரிழந்தன. பெங்களூரு மகாலட்சுமி லே அவுட் மாருதிநகர் நந்தினி வீதி பகுதியில் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். தகவல் அறிந்து மாநகராட்சியை சேர்ந்த 50க்கும் அதிகமான ஊழியர்கள், பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 30 பேர், தீயணைப்பு வீரர்கள் 45 பேர், என்.ஜி.ஆர்.பி.யை சேர்ந்த 45 ஊழியர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரின் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த சாந்தகுமார் (40) என்றும், பெங்களூரு மாநகராட்சியில் குத்தகைதாரராக பணியாற்றி வந்த பசவராஜ் என்பவரின் உறவினர் என்றும் தெரியவந்தது.