மத உணர்வைப் புண்படுத்திய விவகாரம்: தோனி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தினமணி  தினமணி
மத உணர்வைப் புண்படுத்திய விவகாரம்: தோனி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கடவுளை அவமதித்ததாக தோனி மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு வெளியான பிசினஸ் மாத இதழ் ஒன்றில் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியை விஷ்ணு போல சித்தரித்து அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டிருந்தது. தோனிக்கு பல கைகள் இருப்பது போலவும் ஒவ்வொரு கையிலும் ஒரு வியாபாரப் பொருளை வைத்திருப்பது போலவும் அட்டைப் படம் இருந்தது. இதில் ஷூ ஒன்றும் இடம்பெற்றிருந்தது. ‘God of Big Deals’ என்று கட்டுரைக்குத் தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் இந்துக் கடவுளை அவமதிப்பது போல இருக்கிறது என்று சிவசேனா இந்துஸ்தான் அமைப்பை சேர்ந்த ராஜிந்தர் சிங் ராஜா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக ஆந்திராவிலும் வழக்கு தொடரப்பட்டது. அந்தப் புகைப்படம் ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாகக் கூறி, ஆந்திரத்தில் உள்ள அனந்தபூர் நகர நீதிமன்றத்தில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் ஷியாம் சுந்தர் மனு தாக்கல் செய்தார்.

இதன் விளைவாக, ஆந்திராவில் உள்ள அனந்தபூர் நீதிமன்றத்தில் தோனி நேரில் ஆஜராகவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு பிணையில் வெளிவர இயலாத பிடியாணை (கைது வாரண்ட்) பிறப்பிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, தோனி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கடவுளை அவமதித்ததாக தோனி மீது தொடரப்பட்ட வழக்கில் தோனி மீதான குற்றவியல் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மூலக்கதை