கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாணவியர் உள்ளிருப்பு போராட்டம்
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவியர் விடுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி, ஏராளமான மாணவியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடைக்கானலில் உள்ள அட்டுவம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அங்குள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் தங்கும் விடுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, போராட்டத்தின் போது மயக்கமடைந்ததால் 7 மாணவியர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமையல் செய்வதற்கு ஆட்கள் இருந்தும் தாங்களே சமைத்து சாப்பிட வேண்டிய நிலை இருப்பதாகவும், இது குறித்து முறையிட்டால் தகாத வார்த்தைகளால் பேசி தாக்குவதாகவும் மாணவியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.