30-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு.. குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரம்

  தினத்தந்தி
30ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு.. குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரம்

பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 30-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். சொர்க்கவாசல் திறப்பின்போது தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், கோவில் நிர்வாகங்கள் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. கன்னியாகுமரி விவேகானந்தபுரம், விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்து உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடாஜலபதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளன்று அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாத தரிசனத்தை தொடர்ந்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோவிலின் வடக்குப் பக்கம் மலர்களால் அமைக்கப்படும் வடக்கு வாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். வைகுண்டஏகாதசியையொட்டி பூலங்கி சேவை, சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், அலங்கார தீபாராதனை, மாலையில் தோமாலை சேவை, இரவு பள்ளியறை எழுந்தருளும் ஏகாந்த சேவை நிகழ்ச்சி போன்றவை நடக்கின்றன. மேலும் குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழி மார்பன் திருக்கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் போன்ற கோவில்களில் வருகிற 30-ந் தேதி அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், ஏழகரம் பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோவில், மகாதானபுரம் நவநீத சந்தான கோபால கிருஷ்ண சாமி கோவில், கன்னியாகுமரி பாலகிருஷ்ணசாமி கோவில் உள்பட குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 30-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த கோவில்களில் 30-ந்தேதி அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் அந்த வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். திருப்பதிசாரம் திருவாழிமார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில், மகாதானபுரம் நவநீத சந்தான கோபால கிருஷ்ணசாமி கோவில் ஆகிய கோவில்களில் உற்சவ மூர்த்தி பவனி நடக்கிறது.

மூலக்கதை