இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... சிங்கப்பூரில் இந்தியருக்கு சாட்டையடி தண்டனை - 4 ஆண்டுகள் சிறை

  தினத்தந்தி
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... சிங்கப்பூரில் இந்தியருக்கு சாட்டையடி தண்டனை  4 ஆண்டுகள் சிறை

சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியர் ஒருவருக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அந்நாட்டு சட்டப்படி 6 சாட்டையடிகளும் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள சாங்கி சிட்டி பாயிண்ட் வணிக வளாகத்தில், கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி நடந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் தொடர்பான புகாரில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த அங்கித் சர்மா(வயது 46) என்ற நபர், சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார். இவர் பணி நிமித்தமாக 31 வயது பெண் ஒருவரை வணிக வளாகத்தில் உள்ள பாரில் சந்தித்து பேசியுள்ளார். முதலில் வேலை தொடர்பான உரையாடல்கள் நடந்த நிலையில், சிறிது நேரம் கழித்து அங்கித் சர்மா அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக ஆபாசமான முறையில் பேசத் தொடங்கியுள்ளார். இதனால் தர்மசங்கடத்திற்கு உள்ளான அந்த பெண், கழிவறைக்கு சென்று வருவதாக கூறி அங்கிருந்து எழுந்து சென்றுள்ளார். ஆனால் கழிவறை வாசல் வரை அந்த பெண்ணை விடாமல் பின்தொடர்ந்து சென்ற அங்கித் சர்மா, அருகில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறைக்கு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஒருவழியாக அங்கிருந்து தப்பிச் சென்ற இளம்பெண், இது குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அங்கித் சர்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, தன் மீதான குற்றச்சாட்டுகளை அங்கித் சர்மா மறுத்தார். அந்த பெண்ணின் சம்மதத்துடனேயே அவரை நெருங்கிச் சென்றதாகவும், தாய்மார்கள் பாலூட்டும் அறைக்கு செல்ல அந்த பெண்தான் ஆலோசனை கூறியதாகவும் அங்கித் சர்மா தெரிவித்தார். இருப்பினும் அவரது தரப்பு வாதங்களை கோர்ட்டு நிராகரித்தது. அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என புகார்தாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை 3 ஆண்டுகளாக குறைத்து வழங்க அங்கித் சர்மா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6 சாட்டையடிகளும் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

மூலக்கதை