டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த கில் - அபிஷேக் சர்மா ஜோடி

  தினத்தந்தி
டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த கில்  அபிஷேக் சர்மா ஜோடி

துபாய், 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சகிப்சதா பர்ஹான் 58 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 47 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஜோடியான சுப்மன் கில் - அபிஷேக் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க ஜோடி என்ற மாபெரும் சாதனையை கில் - அபிஷேர் சர்மா படைத்துள்ளனர். இதற்கு முன்னர் கம்பீர் - ரகானே ஜோடி 77 ரன்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

மூலக்கதை