இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்: கை குலுக்குவது மீண்டும் தவிர்ப்பு

  தினத்தந்தி
இந்தியா  பாகிஸ்தான் ஆட்டம்: கை குலுக்குவது மீண்டும் தவிர்ப்பு

துபாய், 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சகிப்சதா பர்ஹான் 58 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன அபிஷேக் சர்மா- சுப்மன் கில் இருவரும் பாகிஸ்தானின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். பவர்-பிளேக்குள் 69 ரன்கள் சேகரித்து வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். தொடர்ந்து அதிரடி காட்டிய இவர்கள் 8.4 ஓவர்களில் ஸ்கோர் 100-ஐ தொட வைத்தனர். இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. திலக் வர்மா 30 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அபிஷேக் சர்மா 74 ரன்களிலும், சுப்மன் கில் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நடப்பு தொடரில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடிப்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே லீக்கிலும் பாகிஸ்தானை பதம் பார்த்து இருந்தது. முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய லீக் ஆட்டத்தின்போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சக வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்தது சர்ச்சையானது. காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை மனதில் கொண்டு சூர்யகுமார், பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க விரும்பவில்லை என தெரிவித்தார். இதே போல் நேற்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ போடும் நிகழ்ச்சியில் இந்திய கேப்டன் சூர்யகுமார், எதிரணி கேப்டன் சல்மான் ஆஹாவிடம் கை குலுக்கவில்லை. அதேபோல் ஆட்டம் முடிந்தபோதும் இந்திய அணி வீரர்கள் மீண்டும் கை குலுக்குவதை தவிர்த்து விட்டனர்.

மூலக்கதை