இந்தியா - பாகிஸ்தான் டி20 போட்டி: மாபெரும் சாதனை படைத்த ஹர்திக் பாண்ட்யா

  தினத்தந்தி
இந்தியா  பாகிஸ்தான் டி20 போட்டி: மாபெரும் சாதனை படைத்த ஹர்திக் பாண்ட்யா

துபாய், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சகிப்சதா பர்ஹான் 58 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். டி20 கிரிக்கெட்டில் இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய விக்கெட்டையும் சேர்த்து ஹர்திக் பாண்ட்யா பாகிஸ்தானுக்கு எதிராக 15 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 47 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மூலக்கதை