பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை - ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

நியூயார்க், ஐக்கிய நாடுகள் சபையில், ‘போர் சூழலுக்கு மத்தியில் பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களுக்கான உயிர்காக்கும் சேவைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டங்கள்’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அப்போது, “காஷ்மீரில் உள்ள சமூகங்களை தண்டிப்பதற்கும், அவமானப்படுத்துவதற்கும் பாலியல் வன்முறை நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படுகிறது” என பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இந்நிலையில், பாகிஸ்தானின் குற்றச்சாட்டு குறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் ஆலோசகர் மற்றும் பொறுப்பாளர் எல்டோஸ் மேத்யூ புன்னூஸ் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “1971 ஆம் ஆண்டு முன்னாள் கிழக்கு பாகிஸ்தானில்(தற்போது வங்காளதேசம்) பெண்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் செய்த கொடூரமான பாலியல் வன்முறை குற்றங்களுக்கு தண்டனையின்றி, விசாரணையில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடான வரலாறாகும். மத மற்றும் இன சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான துன்புறுத்தலுக்கான ஆயுதங்களாக கடத்தல், குழந்தை பருவ மற்றும் கட்டாய திருமணங்கள், அடிமைத்தனம், பாலியல் வன்முறை மற்றும் கட்டாய மத மாற்றங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் குற்றங்களைச் செய்பவர்கள் இப்போது நீதியின் காவலர்கள் போல் வேடமிட்டு வருவது முரண்பாடாக உள்ளது. இதன் போலித்தனமும், பாசாங்குத்தனமும் வெளிப்படையாக தெரிகிறது. கொடூரமான பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். போர் சூழலுக்கு மத்தியில் நடக்கும் பாலியல் வன்முறை என்பது தனிப்பட்ட வாழ்க்கையை அழிப்பது மட்டுமல்லாமல், சமூகங்களின் கட்டமைப்பையே சீரழித்து, தலைமுறை தலைமுறையாக சமூகங்களில் நீடித்த வடுக்களை விட்டுச் செல்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மூலக்கதை
