சாவிலும் இணை பிரியாத தம்பதி.. கணவர் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரிழப்பு

ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்தவர் அன்னியப்பன் (வயது 84). இவருடைய மனைவி பாப்பம்மாள் (79). இந்த தம்பதிக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். அன்னியப்பனும், பாப்பம்மாளும் வளையக்காரவீதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர். அவ்வப்போது இவர்களது மகன், மகன்கள் வந்து பார்த்துவிட்டு செல்வார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னியப்பன் தவறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 6 மணிஅளவில் அன்னியப்பன் உயிரிழந்தார். தனது கணவர் விட்டு பிரிந்ததை நினைத்து பாப்பம்மாள் மனவருத்தத்துடன் காணப்பட்டார். மாலையில் அன்னியப்பன் உடல் இறுதிச்சடங்கு செய்ய காவிரிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் எரியூட்டப்பட்டு கொண்டு இருந்தபோது, வீட்டில் இருந்த அவரது மனைவி பாப்பம்மாளின் உயிர் பிரிந்தது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாகவே இருந்த தம்பதி சாவிலும் இணை பிரியாமல் ஒரே நாளில் உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மூலக்கதை
