ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை கடை அடைப்பு போராட்டம்
சென்னை - ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு நடத்துவதற்கு விதித்த தடையை நீக்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தின் போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இதை கண்டித்தும், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வரக்கோரியும் கடந்த 3 நாட்களுக்கு மேலாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தமிழகம் முழுவதும் நாளை கடை அடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறும் போது, ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதிலும் கடைகளை அடைக்கிறோம். மேலும், நாங்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் மேற்கொள்கிறோம்.
தமிழகத்தில் 40 லட்சம் கடைகள் நாளை அடைக்கப்பட்டு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.