அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்; தமிழக அரசு அழைப்பு

தினத்தந்தி  தினத்தந்தி
அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்; தமிழக அரசு அழைப்பு

சென்னை,

அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

விருதுக்கான தகுதி

இதுகுறித்து, பொதுத்துறை முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:–

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணத்துக்கான கபீர் புரஸ்கார் விருது, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது முதல்–அமைச்சரால் வழங்கப்படுகிறது. இந்த விருது மூன்று அளவுகளில் முறையே, ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் மற்றும் தகுதியுரை ஆகியவற்றோடு மூன்று பேருக்கு கொடுக்கப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ஆயுதப்படை, காவல், தீயணைப்பு மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்கலாக, அவர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக இருந்தால் கபீர் புரஸ்கார் விருது பெறத் தகுதி பெற்றவர்களாவர்.

விண்ணப்பம்

ஒரு சாதி, இனம், வகுப்பைச் சேர்ந்தவர்கள், பிற சாதி, இன, வகுப்பைச் சேர்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்திலோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிந்தால், அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

2017–ம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதுக்கென தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள், அவை தொடர்பான ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் மூலமாக, பொதுத்துறை முதன்மைச் செயலாளர், தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு, வரும் டிசம்பர் 15–ந் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்.

அண்ணா பதக்கம்

வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் முதல்–அமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய், ஒரு பதக்கம், தகுதியுரை இந்தப் பதக்கத்தில் அடங்கும்.

வீர, தீரச் செயல் புரியும் பொது மக்களில் மூன்று பேருக்கும், அரசு ஊழியர்களில் மூன்று பேருக்கும் இந்த பதக்கம் அளிக்கப்படும். வயது வரம்பில்லை.

பதக்கத்துக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள், அதற்கான ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் மூலமாக அரசு முதன்மைச் செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை–600 009 என்ற முகவரிக்கு வரும் டிசம்பர் 15–க்குள் அனுப்ப வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை