4ஜி புரட்சி: ஜியோ ஜாலம்!

தினமணி  தினமணி
4ஜி புரட்சி: ஜியோ ஜாலம்!

தொலைத் தொடர்பு சேவைத் துறையில் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி புரட்சி ஆரம்பமாகிறது.

நாட்டின் தொலைத் தொடர்பு சேவைகளையும், கட்டணங்களையும் புரட்டிப் போடுவதால் இதனைப் புரட்சி என்றே சொல்லலாம்!

இதன் மூலம் நாடு முழுவதுமுள்ள 4ஜி ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் 4ஜி அனுபவத்தை 3 மாதங்களுக்கு இலவசமாக பெறுவது சாத்தியமாகியுள்ளது.

இதற்கான ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகள் இதுவரையில் ரிலையன்ஸ் டிஜிட்டலில் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், தற்போது அனைத்து செல்லிடப்பேசி விற்பனை அங்காடிகளிலும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாடு முழுவதிலும் உள்ள 2 லட்சம் அங்காடிகளில் ஜியோ சிம் கிடைக்குமாம்!

வாடிக்கையாளர்கள் பிரீ பெய்டு திட்டமா அல்லது போஸ்ட் பெய்டு திட்டமா என்பதை மட்டும் தெரிவித்துவிட்டு, வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரையில் ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபர் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

3 மாதங்களுக்கு வரம்பில்லா தொலைபேசி அழைப்புகள், அதிவேக 4 ஜி இணையதள சேவை ஆகியவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று ஜியோ தெரிவித்துள்ளது. போனஸாக ரோமிங் கட்டணமும் இல்லை என்று அறிவித்திருப்பது வியாபார விஷயமாக வெளியூர் சுற்றும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வரப்பிரசாதம்.

மிகக் குறுகிய காலத்தில் நாடு முழுவதிலுமிருந்து 10 கோடி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

டிசம்பர் 31-ஆம் தேதி வரையில் அனைத்து சேவைகளையும் இலவசமாகப் பெறும் வாடிக்கையாளர்கள் அதன் பிறகு ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள 10 வகையான திட்டங்களில் தங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதன்படி, ஒரு நாளைக்கு ரூ.19-இல் தொடங்கும் கட்டணம் மாதத்துக்கு ரூ.4,999 வரையில் நீள்கிறது.

உள்ளூர் மற்றும் வெளியூர் தொலைபேசி அழைப்புகள், ரோமிங் ஆகியவற்றை ஆயுள் காலத்துக்கும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ள ரிலையன்ஸ் ஜியோ, டேட்டாவுக்கான கட்டணங்களை மட்டும் வசூலிப்பதாக தெரிவித்துள்ளது.

சந்தையில் 1 ஜி.பி.டேட்டாவுக்கான கட்டணம் சராசரியாக ரூ.250 என்று உள்ள நிலையில், அதனை ரூ.50-க்கு வழங்குவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள தொலைத் தொடர்பு கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளை ஒவ்வொரு நிறுவனமும் மற்ற நிறுவனத்தின் உதவியுடன் சமாளித்து சேவை அளிக்கிறது. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோவும் பிற நிறுவனங்களை ஓரளவுக்கு சார்ந்துள்ளது. அதன் சேவையில் குறைபாடு ஏற்பட்டால் என்ன ஆகும்?

எது எப்படியோ, தொலைத் தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள இந்தப் போட்டி ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது என்றால் மிகையில்லை.

தொலைத் தொடர்பு சந்தை நிலவரம் என்ன ஆகுமோ என்று தற்போது சேவை வழங்கி வரும் பிற நிறுவனங்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கின்றன!

மூலக்கதை