மதுவிலக்கு: பிகார் முதல்வருக்கு தொகாடியா பாராட்டு
பிகாரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திய முதல்வர் நிதீஷ் குமாருக்கு விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அகில உலக செயல் தலைவர் பிரவீண் தொகாடியா பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
பிகாரில் பூரண மதுவிலக்கைக் கொண்டு வந்ததற்காக, அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமாரை மனதார பாராட்டுகிறேன். இதுவரை மதுவுக்காக பொதுமக்கள் செலவிட்டு வந்த கோடிக்கணக்கான ரூபாய் இனி நல்ல காரியங்களுக்குப் பயன்படும்.
இதன்மூலம், அவர்களது துயரங்கள் மறையும்.
பிகாரைப் பின்பற்றி, இந்தியாவின் பிற மாநிலங்களும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
போதை அடிமைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான தொலைபேசி உதவி மையத்தை விஹெச்பி உருவாக்கியுள்ளது.
எங்கள் அமைப்பைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் மூலம் அளிக்கப்பட்டு வரும் இந்தச் சேவைக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றார் அவர்.