பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட்: இங்கிலாந்து அணி 302 ரன்கள் குவிப்பு

தினமணி  தினமணி
பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட்: இங்கிலாந்து அணி 302 ரன்கள் குவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான 5-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 302 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. முன்னதாக நடைபெற்ற 4 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி பரிதாபமாக தோற்றது. இந்நிலையில் கடைசி போட்டி கார்டிஃப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் அபாரமாக ஆடி 87 ரன்கள் (89 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்ஸர்) விளாசினார். மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், 5-ஆவதாக களம்கண்ட பென் ஸ்டோக்ஸ் அதற்கு அணைபோட்டார்.

அவர் 76 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 75 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர்கள் தவிர, பேர்ஸ்டோ (33 ரன்கள்) மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் ரன்சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது. எதிரணி தரப்பில் ஹசன் அலி 4 விக்கெட்டுகளையும், முகமது ஆமிர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, ஆறுதல் வெற்றியாவது பெறலாம் என்ற முனைப்பில் பாகிஸ்தான் அணி 303 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடியது.

மூலக்கதை