உத்தர பிரதேசத்தில் விவசாயி சுட்டுக்கொலை; தந்தையின் மரணத்திற்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு பழிதீர்த்த மகன்

  தினத்தந்தி
உத்தர பிரதேசத்தில் விவசாயி சுட்டுக்கொலை; தந்தையின் மரணத்திற்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு பழிதீர்த்த மகன்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் மங்லோரா பகுதியை சேர்ந்தவர் ஜெய்வீர். இவர் கடந்த 2011-ம் ஆண்டு பிரிஜ்பால் என்ற நபரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன்படி 11 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ஜெய்வீர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையானார். அதன் பின்னர் தனது சொந்த ஊருக்கு சென்று விவசாய தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ஜெய்வீர் வயலில் இருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ராகுல்(வயது 30) என்ற நபர், ஜெய்வீரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த ஜெய்வீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், ஜெய்வீரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ராகுல் என்பவர் ஜெய்வீரால் கொலை செய்யப்பட்ட பிரிஜ்பாலின் மகன் என்றும், தனது தந்தையின் மரணத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு அவர் பழிதீர்த்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள ராகுலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மூலக்கதை