கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி... மனமுடைந்து 4 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த கணவர்

  தினத்தந்தி
கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி... மனமுடைந்து 4 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த கணவர்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியை சேர்ந்தவர் சல்மான். இவரது மனைவி குஷ்னுமா. இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மஹாக்(12), ஷிபா(5), அமான்(3) மற்றும் ஒரு மாத குழந்தை இனைஷா என மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், குஷ்னுமாவிற்கு வேறொரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சல்மானுக்கு தெரியவந்த நிலையில், அவர் தனது மனைவியிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் குஷ்னுமா தனது கள்ளக்காதலை கைவிட மறுத்துள்ளார். இதன் காரணமாக கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை குஷ்னுமாவிற்கும், சல்மானுக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது குஷ்னுமா, இனி தன்னால் இந்த வீட்டில் வாழ முடியாது என்று கூறி, தனது கள்ளக்காதலன் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த அவரது கணவர் சல்மான், நேற்றைய தினம் தனது 4 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு யமுனை நதி மீதுள்ள பாலத்தின் மீது ஏறி அங்கிருந்து ஆற்றில் குதித்துவிட்டார். இந்த முடிவை எடுப்பதற்கு முன் அவர் தனது செல்போனில் பதிவு செய்த வீடியோவை அவரது சகோதரிக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவில், தன்னுடைய முடிவிற்கு குஷ்னுமாவும், அவரது கள்ளக்காதலருமே காரணம் என்று சல்மான் கூறியுள்ளார். இதனிடையே, ஆற்றில் குதித்த 4 பேரும் சீறிப்பாய்ந்த வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், நீச்சல் வீரர்கள் உதவியோடு அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை