பட்ஜெட்டில் இலச்சினை மாற்றம்: தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை, தமிழ்நாட்டில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். தற்போதைய தி.மு.க. ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதன்முறையாக பொருளாதார ஆய்வறிக்கைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்த நிலையில் தேவநாகரி எழுத்தில் உள்ள ரூபாய் குறியீட்டை மாற்றி 'ரூ' என்ற தமிழ் எழுத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய இலட்சினையை வெளியிட்டார். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், "'எல்லார்க்கும் எல்லாம்' என்கிற வாசகத்துடன் " சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட" என குறிப்பிட்டு தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இலட்சினையை பதிவிட்டிருந்தார். மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, கல்விக்கு நிதி வழங்காதது உள்ளிட்டசர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் இலட்சினையில் தேவநாகரி எழுத்தான '₹' குறியீட்டுக்கு பதிலாக 'ரூ' என மாற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 2025-2026-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டுக்கான இலட்சினையில் இந்த குறியீடு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் 15 அலுவல் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை முதல்-அமைச்சர் உபயோகித்து உள்ளார் என்றும், இது தாய் மொழி தமிழ் மீதான பற்றை பறைசாற்றும் விதமாக உள்ளது என்றும், இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது இல்லை என்றும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலக்கதை
