கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நாட்பட்ட தீக்காயத்தை விரைந்து குணப்படுத்தும் சிகிச்சை

  தமிழ் முரசு
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நாட்பட்ட தீக்காயத்தை விரைந்து குணப்படுத்தும் சிகிச்சை

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாட்பட்ட தீக்காயங்களை விரைவாக குணப்படுத்த உயர் அழுத்த உயிர்வாயு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகள் தொலைக்காட்சிப் பார்த்துக்கொண்டே சிகிச்சை பெறும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் தீ விபத்தால் ஏற்படும் காயங்களை குணப்படுத்த சிறப்புத் தீக்காயப் பிரிவு மற்றும் அதிநவீன கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. நீண்ட நாள்களாக குணமாகாமல் இருக்கும் காயங்களைச் சரிசெய்ய நோயாளிகளுக்கு உயரழுத்த உயிர்வாயு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்த சிகிச்சை மூலம் நோயாளிகளின் திசுக்களுக்கு தேவையான உயிர்வாயு மூன்று மடங்கு சீராக வழங்கப்படுகிறது. இதனால் தீக்காயம் மற்றும் நீரிழிவு நோயால் ஏற்படும் காயங்கள் விரைவில் குணப்படுத்தப்படுகிறது.கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீக்காயப் பிரிவில் உயரழுத்த உயிர்வாயு சிகிச்சை கருவியை கடந்த மாதம் சுகாதாரத்துறை மா.சுப்பிரமணியன் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். உயர் அழுத்த உயிர்வாயு சிகிச்சைக் கருவி மூலம் இதுவரை 54 பேர் பயனடைந்துள்ளனர்.இது தொடர்பாக மருத்துவமனை தீக்காயப் பிரிவு தலைவர் மருத்துவர் பி.நெல்லையப்பர் கூறியபோது, “இந்த மருத்துவமனையில் உயரழுத்த பிராணவாயு சிகிச்சைக் கருவி ரூ.1.17 கோடியில் நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கருவி மூலம் இதுவரை தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 54 நோயாளிகளுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது”, என்றார்.“சிகிச்சையின்போது நோயாளிகளுக்கு களைப்பு தெரியாமல் இருப்பதற்காக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மூலம் பார்த்து ரசிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.“முதலில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி பெரிய கண்ணாடி பெட்டியில் வைத்து முழுவதுமாக மூடப்படுவார்கள். பின்னர், உயர்அழுத்த உயிர்வாயுவை கண்ணாடி பெட்டியில் செலுத்தி சிகிச்சை தொடங்கும். கருவியின் உள்ளே இருக்கும் நோயாளியிடம் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் வெளியில் இருந்து சிறிய மைக் மூலம் தொடர்புகொண்டு பேசுவார்கள். உயரழுத்த உயிர்வாயு சிகிச்சை நோயாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது,” என்று தீக்காயப் பிரிவுத் தலைவர் மருத்துவர் பி.நெல்லையப்பர் கூறினார்.

மூலக்கதை