பாசனம் நடைபெறாத மதுரை கண்மாய்களை கைவிட்றாதீங்க ஆபீசர்ஸ்; ஆக்கரமிப்பில் மெல்ல மெல்ல அழிந்துவருகிறது

தினமலர்  தினமலர்
பாசனம் நடைபெறாத மதுரை கண்மாய்களை கைவிட்றாதீங்க ஆபீசர்ஸ்; ஆக்கரமிப்பில் மெல்ல மெல்ல அழிந்துவருகிறது



மதுரை: நீர்வளத்துறையின் கீழ் உள்ள நீர்ப்பாசனம் நடைபெறாத கண்மாய்களை முறையாக பராமரிக்காததால் அவற்றின் நீர்வழித்தட வாய்க்கால்கள் மறைந்து வருவதோடு கண்மாய்களும் காணாமல் போகும் வாய்ப்புள்ளது.

மதுரை மாநகராட்சி எல்லைக்குள் கோச்சடை கண்மாய், பரசுராம்பட்டி, எஸ்.ஆலங்குளம், செல்லுார், ஆத்திகுளம், முடக்காத்தான், பெரியபுளியங்குளம், மானகிரி, செங்குளம், ஓதுவார் கண்மாய், பி.பீ.குளம், கோசாகுளம், சின்னபுளியங்குளம் கண்மாய்களுக்கான பாசனப்பரப்பு குறைந்து வீடுகளாகி விட்டன. இவை அனைத்தும் நீர்வளத்துறையின் கீழ் சங்கிலித்தொடர் போல பாசனபரப்பு கொண்ட கண்மாயாக இருந்தவரை, அதில் தண்ணீர் தேக்கி பராமரிக்கப்பட்டு வந்தது. பாசன வசதி தரும் கண்மாய்களை பராமரிக்க மட்டுமே நீர்வளத்துறையின் கீழ் நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால் பாசனமில்லா கண்மாய்கள் நல்ல நிலையில் இருந்தாலும் பராமரிப்பு நிதி இல்லாத காரணத்தால் நீர்வளத்துறையினர் இவற்றை கைவிடுகின்றனர்.

கண்மாயை சுற்றி வீடுகளாக மாறிய நிலையில் கண்மாய்க்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய்களும் மெல்ல ஆக்கிரமிப்பில் சிக்கி, ரோடாக, வீடுகளுக்கான படிக்கட்டாக, சுற்றுச்சுவராக மாறி வருகிறது. போதாகுறைக்கு மாநகராட்சியின் கழிவுநீர் சேகரிக்கப்படும் குட்டையாக மாறிவருகிறது. கண்மாய்களுக்கான வரத்து கால்வாயை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு நீராதார மையமாக மாற்றினால் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கண்மாய் கரையை சுற்றி நடைபாதை அமைத்தால் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். படகு சவாரி விடலாம். மாநகராட்சியின் கழிவுநீர் சேருவதும் தடுக்கப்படும்.

நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஞானசேகரன் கூறுகையில் ‛‛நடைபாதை அமைப்பது, படகுசவாரி விடுவதற்கு நிதியில்லை. சுற்றுலாத்துறை இணைந்து செயல்பட்டால் கண்மாயை பராமரிக்க தடையில்லா சான்று வழங்க தயாராக உள்ளோம். கண்மாய் எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். அதன் மூலம் பொதுமக்கள் பயன்பெற்றால் நல்லது தான்'' என்றார்.

மதுரை: நீர்வளத்துறையின் கீழ் உள்ள நீர்ப்பாசனம் நடைபெறாத கண்மாய்களை முறையாக பராமரிக்காததால் அவற்றின் நீர்வழித்தட வாய்க்கால்கள் மறைந்து வருவதோடு கண்மாய்களும் காணாமல் போகும்

மூலக்கதை