கோயம்பேடு, வேளச்சேரியில் புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோயம்பேடு, வேளச்சேரியில் புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் கட்டப்பட்ட கோயம்பேடு மற்றும் வேளச்சேரி மேம்பாலத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன்மூலம் அந்த பகுதியில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், வாகன ஓட்டிகள் காத்திருப்பதும் தவிர்க்கப்படும்.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரூ. 146 கோடி செலவில் மேடவாக்கம்- சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பில் மேம்பாலம், ரூ. 108 கோடி செலவில் வேளச்சேரி விஜயநகர் மேம்பாலம், ரூ. 93 கோடியில் கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலம் கட்ட கடந்த 2012ல் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இப்பணிளுக்கு நிதி ஒதுக்கீடு பெறுவதிலும், டெண்டர் பணிகளை முடிப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் கடந்த 2015ல் தான் கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலம், வேளச்சேரி விஜயநகர் மேம்பால பணி தொடங்கப்பட்டது. இப்பணிகளை 2018க்குள் முடிக்க வேண்டும் என்று கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

மேம்பாலம் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி மற்றும் ஒப்பந்ததாரர்களின் தாமதம் காரணமாக பல ஆண்டுகளாக மேம்பாலம் கட்டும் பணி தாமதமானது. இதனால் கடந்த 4 ஆண்டுக்கும் மேலாக கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இதற்கு ஒரு தீர்வு கிடைக்காதா? என்று அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பல ஆண்டுகளாக எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்த நிலையில்தான் கடந்த மே மாதம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோயம்பேடு மேம்பாலம் மற்றும் வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து, கோடம்பாக்கம் மேம்பாலம் மற்றும் வேளச்சேரி முதல் அடுக்கு மேம்பால பணிகளை அக்டோபர் 31ம் தேதிக்குள்ளும், மேடவாக்கத்தில் 2வது கட்ட மேம்பாலம், வேளச்சேரியின் 2வது கட்ட மேம்பால பணியை டிசம்பர் மாதத்திற்குள்ளும் முடிக்க அமைச்சர் எ. வ. வேலு ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, கோயம்பேடு மற்றும் வேளச்சேரி மேம்பால பணிகள் விரைவாக நடைபெற்று, கடந்த வாரம் முடிவடைந்து பொதுமக்கள் போக்குவரத்துக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. கோயம்பேடு மேம்பாலத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று காலை 10. 35 மணிக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர், புதிய மேம்பாலத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் கார் மூலம் பயணம் செய்தனர். இந்த மேம்பாலம் ரூ. 93 கோடி செலவில் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் புதிய மேம்பாலம் இன்று திறக்கப்பட்டதன் மூலம், கோயம்பேடு பேருந்து நிலையம், மார்க்கெட், வடபழனி, கிண்டி, அண்ணாநகர், முகப்பேர், மதுரவாயல் மற்றும் சென்னை நகருக்குள் வரும் வாகன ஓட்டிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அரசு மற்றும் தனியார் பேருந்தில் பயணம் செய்பவர்களும் இனி போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கோயம்பேடு பகுதியை கடந்து செல்ல முடியும். கோயம்பேடு 100 அடிசாலையில் தினமும் 1. 5 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன.

இந்த பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் 2 சிக்னல் சந்திப்புகளில் வாகனங்கள் நிற்காமல் செல்லக்கூடிய நிலை ஏற்படும்.

காளியம்மன் கோவில் தெரு சந்திப்பு வழியாக மார்க்கெட், ஆம்னி பஸ் நிலையம் செல்லக் கூடிய வாகனங்கள் மற்றும் கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்திற்கு செல்லக் கூடிய சந்திப்புகளில் நெரிசல் இல்லாமல் செல்ல முடியும். கிண்டி, வடபழனியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மேம்பாலத்தின் வழியாக திருமங்கலம், செங்குன்றம் மார்க்கத்திற்கு எளிதாக செல்ல முடியும்.

இதேபோன்று அந்த பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் கிண்டி மார்க்கத்திற்கு எளிதாக கடந்து செல்ல முடியும். இதைத்தொடர்ந்து, முதல்வர் மு. க. ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் வேளச்சேரி முதல் அடுக்கு பாலத்தை திறந்து வைத்தார்.

இதையடுத்து புதிய மேம்பாலத்தில் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த பாலம் கட்டி திறக்கப்பட்டுள்ளதன் மூலம், புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை நகருக்குள் தினசரி வரும் லட்சக்கணக்கான வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சென்னை நகருக்குள் வந்து செல்ல முடியும். கோயம்பேடு மற்றும் வேளச்சேரி மேம்பாலங்கள் இன்று திறக்கப்பட்டதன் மூலம், சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு நேரம் மிச்சமாகும் என்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, எம்எல்ஏக்கள் பிரபாகர்ராஜா, அசன் மவுலானா, வேளச்சேரி பகுதி செயலாளர் அரிமா சு. சேகர், கோயம்பேடு பகுதி செயலாளர் கண்ணன் மு. ராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தீபாவளிக்கு நெரிசல் குறையும்
கோயம்பேடு, வேளச்சேரி பகுதியில் புதிய மேம்பாலம் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதியில் வரும் 60 முதல் 65 சதவீதம் வாகனங்கள் நேரடியாக மேம்பாலம் வழியாக இனிவரும்  காலங்களில் கடக்க முடியும்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் சென்னை நகருக்குள் போக்குவரத்து அதிகரிக்கும். பண்டிகைக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.   பண்டிகைக்காக வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் நெரிசல் இல்லாமல் உரிய நேரத்தில் செல்ல வசதியாக புதிய மேம்பாலத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

புதிய மேம்பாலம் திறக்கப்படுவதன் மூலம் கோயம்பேடு 100 அடி  சாலை மற்றும் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைந்துவிடும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பகுதியில் இனி நெரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று வாகன  ஓட்டிகள் கருதுகின்றனர்.

.

மூலக்கதை