மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு

சென்னை: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10. 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இன்று காலையில் தீர்ப்பளித்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில் 10. 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சுவாமிநாதன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் எம். துரைசாமி மற்றும் கே. முரளிசங்கர் அடங்கிய அமர்வு விசாரித்தது.



விசாரணையின் போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே. எம். விஜயன், சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது எனவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 68  சாதிகளைக் கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7. 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில் வன்னியர்களுக்கு 10. 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2. 5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் என்றும் வாதிடப்பட்டது. தமிழக அரசுத்தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையிலேயே  வன்னியர்களுக்கு 10. 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.



மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983ல் நடத்திய கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 13. 01 சதவீதம் பேர் வன்னியர்கள் உள்ளதாக கிடைக்கப்பெற்ற நம்பத்தகுந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கடைசி நிமிடம் வரை கொள்கை முடிவெடுக்கவும், சட்டம் இயற்றவும் அதிகாரம் உள்ளது.



இதில் அரசியல் காரணங்களோ அவசரமோ ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக பா. ம. க.

நிறுவனர் ராமதாஸ் தரப்பில் வக்கீல்கள் கே. பாலு, ஜோதிமணியன் ஆகியோர் ஆஜராகி, வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. தேர்தலில் குறிப்பிட்ட ஜாதியினரின் வாக்குகளைப் பெற அரசியல் உள்நோக்கத்துடன் இந்த இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறுவது தவறு.

 
முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த புதிய அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம் இந்த சட்டத்தை நிறைவேற்றியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

வன்னியர்களுக்கு மட்டும் 10. 5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

வன்னியகுல சத்திரியர் பிரிவில் ஏழு சாதியினர் உள்ளனர். வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர்.

தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ஏற்கனவே உள்ள ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில சட்டப்பேரவை முடிவு எடுக்க முடியுமா?, சாதி வாரியாக எந்த கணக்கெடுப்பும் எடுக்காமல், இதுபோன்ற உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? எந்த ஆய்வும் பண்ணாமல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் ஒரு பிரிவினருக்கு 10. 5 சதவீத ஒதுக்கீடு வழங்க முடியுமா?

என்பது உள்ளிட்ட 7 கேள்விகளை இந்த நீதிமன்றம் எழுப்பியிருந்தது. அதற்கு பதிலளித்து வாதிடப்பட்டது.

அனைத்து வாதங்களையும் கேட்ட பிறகும் இந்த நீதிமன்றம் முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி கல்வி, வேலைவாய்ப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10. 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது சட்ட விரோதம்.

எனவே, இந்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை