கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலம் நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலம் நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னை: சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலத்தை நாளை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து  வைக்கிறார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ரூ. 146 கோடி  செலவில் மேடவாக்கம்- சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பில் மேம்பாலம் மற்றும் ரூ. 108  கோடி செலவில் வேளச்சேரி-விஜயநகர் மேம்பாலம், ரூ. 93 கோடி செலவில் கோயம்பேடு  காளியம்மன் கோயில் மேம்பாலம் கட்ட கடந்த 2012ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.



இப்பணிளுக்கு நிதி ஒதுக்கீடு பெறுவதிலும், டெண்டர் பணிகளை முடிப்பதில்  ஏற்பட்ட காலதாமதத்தால் கடந்த 2015ம் ஆண்டுதான் கோயம்பேடு காளியம்மன் கோயில்  மேம்பாலம், வேளச்சேரி விஜயநகர் மேம்பாலப்பணிகள் தொடங்கப்பட்டது. 2018க்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு வேளச்சேரி  விஜயநகர் மேம்பாலத்தின் ஒரு பகுதி, கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பால  பணிகளை அக்டோபர் 31ம் தேதிக்குள்ளும், மேடவாக்கம் மேம்பாலம், வேளச்சேரி  முதல் அடுக்கு மேம்பால பணியை டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்க அமைச்சர்  எ. வ. வேலு உத்தரவிட்டார்.

இதையடுத்து, மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் இறுதி கட்டப்பணிகள் வேகமாக நடந்துவந்தது.

கடந்த 27ம் தேதி மேம்பாலம் திறப்பதாக இருந்த நிலையில், திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த  நிலையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் வேளச்சேரி மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து கோயம்பேடு மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். கோயம்பேடு 100  அடி சாலையில் தினமும் 1. 5 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன.



இந்த பாலம்  அமைக்கப்பட்டதன் மூலம் 2 சிக்னல் சந்திப்புகளில் வாகனங்கள் நிற்காமல்  செல்லக்கூடிய நிலை ஏற்படும். காளியம்மன் கோயில் தெரு சந்திப்பு  வழியாக கோயம்பேடு மார்க்கெட், தனியார் ஆம்னி பஸ் நிலையம் செல்லக் கூடிய வாகனங்கள் மற்றும்  கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்துக்கு செல்லக் கூடிய சந்திப்புகளில் நெரிசல்  இல்லாமல் மக்கள் பயணிக்க முடியும்.

கிண்டி, வடபழனியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள்  மேம்பாலத்தின் வழியாக திருமங்கலம், செங்குன்றம் மார்க்கத்துக்கு எளிதாக  செல்ல முடியும்.

இதேபோன்று அந்த பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள்  கிண்டி மார்க்கத்துக்கு எளிதாக கடந்து செல்ல முடியும்.

60 முதல் 65  சதவீதம் வாகனங்கள் நேரடியாக மேம்பாலம் வழியாக கடக்க முடியும் என்பதால் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்படும். இந்த புதிய மேம்பாலம் திறக்கப்படுவதன் மூலம் 100 அடி  சாலையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைந்துவிடும்.

மேம்பாலங்கள் மூலம் போக்குவரத்து  நெரிசல் குறைவதால் மக்களுக்கு நேரம் மிச்சமாகும்.

.

மூலக்கதை