3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் கடும் கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் இன்று 240 மையங்களில் 1.17 லட்சம் பேர் நீட் எழுதுகின்றனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் கடும் கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் இன்று 240 மையங்களில் 1.17 லட்சம் பேர் நீட் எழுதுகின்றனர்

சென்னை: நீட் அச்சத்தில் தமிழகத்தில் நேற்று ஒரு மாணவி, 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று தமிழகத்தில் 240 மையங்களில் இத்தேர்வை 1. 17 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தவிர, மாணவ, மாணவிகளுக்கான வழக்கமான கட்டுப்பாடுகளும் கடுமையாக கடைபிடிக்கப்படுகின்றன. மருத்துவ கல்லூரிகளில் 2020-21ம் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான தேசிய அளிவிலான நுழைவுத் தேர்வு (நீட்) கடந்த மே மாதம் நடைபெறுவதாக இருந்தது.

கொரோனா தொற்று காரணமாக இத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ள தயாரான மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது இந்த ஆண்டும் தொடர்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன், நீட் தேர்வுக்கு தயாரான அரியலூரைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் மன உளைச்சலால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அலை ஓய்வதற்குள், நீட் தேர்வுக்கு பயந்து நேற்று ஒரே நாளில் மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி துர்கா, தர்மபுரியை சேர்ந்த ஆதித்யா, திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோதிலால் என அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 12 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நாடு முழுவதும் 3,842 தேர்வு மையங்களிலும், தமிழகத்தில் 240 மையங்களிலும் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடிசா, அசாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் திருச்சி, சேலம், சென்னை, திருநெல்வேலி, மதுரை, கோவை உள்ளிட்ட 14 நகரங்களில் 240 தேர்வு  மையங்களில் இத்தேர்வை 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் இன்று எழுதுகின்றனர்.

இன்று மதியம் 2 மணிக்கு துவங்கும் தேர்வு மாலை 5 மணி வரை நடக்கிறது. தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் கிருமிநாசினி கொண்டு காலை ஒருமுறை மற்றும் மாலை ஒருமுறை என இரண்டு முறை சுத்தம் செய்யப்பட்டது. காலை 11. 40 மணி முதல் மதியம் ஒரு மணி வரை தேர்வு மையங்களுக்குள் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.

மாணவ, மாணவியர்களின் உடலை தொடாமல் வெப்ப அளவீட்டு சோதனை செய்யப்பட்டது. சமூக இடைவெளியுடன் 2 மீட்டர் இடைவெளி கொண்ட வட்டத்தில் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலம் மாணவர்களை தொடாமல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாணவ, மாணவியர் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க 3 அடி இடைவெளி விட்டு தேர்வு மையங்களில் இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர். ஒரு அறையில் 20 பேர் மட்டுமே தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்கள் 50 மிலி சானிடைசரை உடன் கொண்டு வர அனுமதிக்கப்பட்டனர். முகக் கவசம் மற்றும் கையுறைகளை மாணவர்கள் அணிந்து வர வேண்டும், அரசால் வழங்கப்பட்ட பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, 12ம் வகுப்பு  தேர்வுக்கு வழங்கப்பட்ட ஹால்டிக்கெட், பாஸ்போர்ட், ஆதார், ரேஷன் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.

அவை அசல் அடையாள அட்டையாக இருக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் அரைக்கை சட்டை அணிந்து வர வேண்டும்.

ஷூ, சாக்ஸ் அணியக்கூடாது.

காலணியில் ஹை ஹூல்ஸ் வைக்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் அனைத்து மையங்களிலும் கடைபிடிக்கப்பட்டன.

.

மூலக்கதை