தமிழக அரசு ரூ.68 கோடி இழப்பீடு வழங்கியதன் மூலம் ஜெயலலிதாவின் இல்லம் அரசுடைமையானதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது; 4.4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளியும் அடங்கும்
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்துக்கு தமிழக அரசு 67 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரத்து 33 ரூபாய் இழப்பீடு வழங்கியதன் மூலம், ஜெயலலிதாவின் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், ஜெயலலிதா வீட்டின் உள்ள 4 கிலோ 372 கிராம் தங்கமும், 601 கிலோ வெள்ளியும் அடங்கும்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை மக்கள் பார்க்கும் வகையில், நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து2017ம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அறிவித்தார். ஜெயலலிதா வீடு நினைவு இல்லமாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கியது.
அதன்படி, ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கும், அந்த இடத்தை கையகப்படுத்தவும் 2013ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குவது குறித்த விசாரணையை சென்னை தென் மண்டல வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, நிலம் கையகப்படுத்தும் அதிகாரியாக இந்த விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில், ஜெயலலிதா வசித்து வந்த நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட, சென்னை தென் மண்டல வருவாய் கோட்டாட்சியர் சார்பில் கடந்த 22ம் தேதி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தல், நியாயமான இழப்பீட்டு உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டத்தின் கீழ், போயஸ் தோட்டத்து கட்டிடங்களுக்கு 2 கோடியே 73 லட்சம் ரூபாயும், அங்குள்ள மரங்களுக்கு 11 ஆயிரத்து 47 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தின் நிலத்திற்கு சதுர அடிக்கு 12,060 ரூபாய் வீதம், 24 ஆயிரத்து 322 சதுர அடிக்கு, 29 கோடியே 33 லட்சத்து 23 ஆயிரத்து 320 ரூபாயும், நூறு சதவீத கூடுதல் இழப்பீடாக 29 கோடியே 33 லட்சத்து 23 ஆயிரத்து 320 ரூபாயும் சேர்த்து மொத்தம் 58 கோடியே 66 லட்சத்து 46 ஆயிரத்து 640 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கட்டிடங்களுக்கான மதிப்பீடு மற்றும் மரங்களுக்கான மதிப்பீடும் நூறு சதவீத கூடுதல்இழப்பீடு சேர்த்து 5 கோடியே 47 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
கூடுதலாக 12 சதவீத சந்தை மதிப்பாக 3 கோடியே 76 லட்சத்து 52 ஆயிரத்து 359 ரூபாய் கணக்கிட்டு, 67 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரத்து 33 ரூபாய் என இழப்பீடு நிர்ணயித்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு ரூ. 67. 90 கோடி டெபாசிட் செய்துள்ளது.
இதன்மூலம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லம் அரசுடைமையானது.
மேலும், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடையாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அரசிதழில் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
அரசுடைமையாக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில், அசையும் சொத்துக்களை தவிர அசையாத சொத்துக்களாக 32,721 பொருட்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி 4 கிலோ 372 கிராம் தங்கம், 601 கிலோ வெள்ளி பொருட்கள் உள்பட மொத்தம் 32,721 பொருட்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்களும் அரசுடைமையாக்கப்பட்டு, நினைவு இல்லமாக மாற்றும்போது பொதுமக்கள் பார்க்கும் வகையில் வைக்கப்படும் என்று தெரிகிறது.
அதன் விபரங்கள் வருமாறு:
தங்கம் 14 பொருட்கள் - 4 கிலோ 372 கிராம்
வெள்ளி 867 பொருட்கள் - 601 கிலோ 424 கிராம்
வெள்ளி பொருட்கள் (சிறிய பாத்திரங்கள்) - 162 பொருட்கள்
தொலைக்காட்சிகள் - 11
ரெஃப்ரிஜெராடோர்ஸ் - 10
ஏர்கண்டிஷனர்கள் - 38
தளவாட பொருட்கள்- 556
சமையலறை பாத்திரங்கள் 6- 514
பர்னிச்சர்கள் மற்றும் தளவாடங்கள் - 12
கட்லரி பொருட்கள் (ஷோகேஸ்)- 1055
பூஜை பாத்திரங்கள் - 15
ஆடை, காலணி போன்றவை- 10,438
தொலைபேசிகள், மொபைல் போன் - 29
சமையலறை மின் பொருட்கள் - 221
மின்சார பொருட்கள் - 25
புத்தகங்கள் - 8376
மெமெண்டோஸ் - 394
உரிமம், நீதிமன்ற ஆவணங்கள் - 653
எழுதுபொருள் பொருட்கள் - 253
அலங்கார பொருட்கள் - 1712
சூட்கேஸ்கள், பைகள் - 65
ஒப்பனை பொருட்கள் - 108
கடிகாரங்கள் - 6
ஜெராக்ஸ் இயந்திரம் - 1
லேசர் பிரிண்டர் - 1
இதர பொருட்கள் - 95
மொத்தம் - 32,721