கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் சென்னையில் 8 பேர் உயிரிழப்பு
சென்னை: சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகரிக்கும் கொரோனா பலியால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது.
நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 1286 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில், சென்னையில் மட்டும் 1012 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் சென்னையில் மட்டுமே 17,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தினாலும் சென்னையில் கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளதாக அரசும் தெரிவித்துள்ளது.
முதல் 2 ஊரடங்கின்போது கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு, அரசு அறிவித்த தளர்வுகளால் தற்போது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாஸ்க் அணியாமல் வெளியே செல்வது, அடிக்கடி கைகளை கழுவாமல் இருப்பது, அரசின் அறிவுறைகளை காற்றில் பறக்க விடுவது உள்ளிட்டவைகள் பரவல் அதிகரிப்பதற்கு காரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் எந்தளவிற்கு கொரோனா பரவல் காணப்படுகிறதோ அந்த அளவிற்கு இறப்பின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 2 பேரும், ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 5 பேரும், ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதியவர் ஒருவரும் என 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாள் தோறும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது சென்னை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
.