கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி
திருவில்லிபுத்தூர்: கொரோனா தொற்றால் உயிரிழந்த திருவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தொகுதி (தனி), திமுக கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அத்தொகுதியின் வேட்பாளராக மாதவராவ் (63) அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர், தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். மார்ச் 17ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து 2 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். 20ம் தேதி, திருவில்லிபுத்தூரில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போதே அவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அன்றே மதுரை கே. கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா ெதாற்று உறுதியானது.
இந்நிலையில், மாதவராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனால், செயற்கை சுவாச கருவிகள் ெபாருத்தப்பட்டு சிகிச்சை தொடர்ந்தது.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை 7. 50 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடலை, மதுரை மருத்துவமனையில் இருந்து உறவினர்கள் திருவில்லிபுத்தூர் காதிபோர்டு காலனியில் உள்ள வீட்டுக்கு நேற்று மதியம் கொண்டு சென்றனர். இதையடுத்து மாதவராவ் உடல், அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
உறவினர்கள் மற்றும் மதுரை, விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, இன்று காலை 10. 30 மணியளவில் திருவில்லிபுத்தூரில் உள்ள சுடுகாட்டில் அவரது உடல், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நல்லடக்கம் செய்யப்பட்டது.
.