20 தொகுதிகள் ஒதுக்கீடு; அதிமுக தலைவர்கள் மீது பாஜக கடும் அதிருப்தி: நள்ளிரவில் ஒப்பந்தம் வெளியானது ஏன்? பரபரப்பு தகவல்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
20 தொகுதிகள் ஒதுக்கீடு; அதிமுக தலைவர்கள் மீது பாஜக கடும் அதிருப்தி: நள்ளிரவில் ஒப்பந்தம் வெளியானது ஏன்? பரபரப்பு தகவல்கள்

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு தொகுதிகளை குறைத்து ஒதுக்கி உள்ளதால் அதிமுக தலைமை மீது பாஜ தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை வரை பாமகவுடன் மட்டும் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் முடிந்திருந்தது. அந்த கட்சிக்க 23 இடங்கள் ஒதுக்கப்பட்டது.

மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்து வந்தது. 60 சீட்டுகள் வேண்டும் என்று பாஜ முதலில் கோரிக்கை விடுத்தது.

ஆனால் அதிமுக தரப்பில் 15 தொகுதிகள் தருவதாக கூறினர். அப்போதுதான் எதிர்பாராதவிதமாக அமமுகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று பாஜ தலைமை விரும்பியது.

அமமுகவுக்கு தொகுதிகளை நாங்கள் ஒதுக்கிக்கொள்கிறோம் எனவே 40 சீட் வேண்டும் என்று பாஜ இறங்கி வந்தது.

பாஜ மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவும் அமமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்தலாம் என்று கூறினார். ஆனாலும் அதிமுக தலைவர்கள் இதை ஏற்கவில்லை.

கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு 26 தொகுதிகள் தர அதிமுக முன் வந்ததாக கூறப்படுகிறது. இந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்தால், செலவுகளை பாஜகவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

20 தொகுதிகளை பெற்றால் நாங்கள் செலவு செய்கிறோம் என்று அதிமுக தலைவர்கள் வாக்குறுதி கொடுத்தனர். இந்நிலையில், நேற்று நல்ல நாள் ஆகும்.

மதியம் 1 மணி முதல் 2 மணி வரை சுக்கிர ஓரை எனப்படும் நல்ல நேரமாகும். ஜெயலலிதாவுக்கு பிடித்த எண் 6.

எனவே இந்த நல்ல நேரத்தில் நேற்று அதிமுகவின் 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதே நல்ல நாளில் பாஜகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நேற்றே முடிக்க அதிமுக திட்டமிட்டது.



ஆனா, தமிழக பாஜ பொறுப்பாளர் சி. டி. ரவி ஒசூர் மற்றும் நீலகிரியிலும், தமிழக பாஜ தலைவர் எல். முருகன் நெல்லை, தூத்துக்குடியிலும் சுற்றுப் பயணத்தில் இருந்தனர். இதனால், தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய இணை அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி. கே. சிங் மற்றும் சி. டி. ரவி ஆகியோருடன் அதிமுக தலைவர்கள் செல்போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, தேமுதிகவுக்கு அதிக சீட் தர வேண்டி உள்ளதால், 20 சீட் தருவதாகவும், செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பாஜ தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

தேமுதிக முதலில் 40 தொகுதிகள் கேட்டது. பின்னர் பாமகவுக்கு இணையாக தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை விடுத்தது.

ஆனால் அதிமுக தரப்பில் 10 தொகுதிகள் மட்டும் தருவதாக கூறப்பட்டது. இதனால் தேமுதிக கடும் அதிருப்தி அடைந்தது.



2011ல் தேமுதிக இல்லாவிட்டால், அதிமுகவே இருந்திருக்காது. கூட்டணிக்காக அதிமுகதான் நம்மிடம் கெஞ்சுகிறது என தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதீஷ் பகிரங்கமாக பேசினார்.

நேற்று சென்னையில் பேட்டியளித்த தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி, அதிமுகவிடம் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதனால், தேமுதிகவை கூட்டணியில் தக்க வைக்க அதிமுக கடுமையாக போராடி வருகிறது. இதனால், பாஜவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கினால், தேமுதிகவுக்கு 15 சீட்டுகள் ஒதுக்க முடியும் என்ற அடிப்படையில் பாஜவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடந்தது.

நீண்ட இழுபறிக்கு பின் பாஜ 20 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்தது. மேலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் பாஜவுக்கு வழங்கப்பட்டது.



இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் சி. டி. ரவி மற்றும் எல். முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இதனால் நள்ளிரவில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அறிக்கை வெளியிடப்பட்டது.

நமது தயவால் தான் அதிமுக 4 வருடம் ஆட்சி நடந்தது. அதையெல்லாம் மறந்து விட்டு, நமக்கு தருவதாக ஒப்புக்கொண்ட தொகுதிகளையும் பறித்து விட்டனர்.

நமக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே 6 வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டனர். தேர்தல் முடியட்டும், பார்த்துக்கொள்வோம் என்று பாஜ தலைவர்கள் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் 20 தொகுதிகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டுமானால் நாங்கள் கேட்கும் தொகுதிகளை தர வேண்டும் என்று பாஜ தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதை அதிமுக தலைவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி பாஜகவுக்கு ஒதுக்க இருக்கும் சில தொகுதிகள் விவரம் வெளியாகி உள்ளது.

சென்னையில் மயிலாப்பூர், துறைமுகம், சேப்பாக்கம்திருவல்லிக்கேணி, ஆலந்தூர் ஆகிய தொகுதிகள் வழங்க அதிமுக தலைமை ஒப்புக்கொண்டது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்காக கிணத்துக்கடவு, வானதி சீனிவாசனுக்காக கோவை தெற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

நடிகை கவுதமிக்கு ராஜபாளையம், நயினார் நாகேந்திரனுக்காக தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 தொகுதிகள் என்று 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 18 தொகுதிகள் வரை எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டு விட்டது.

2 தொகுதிகளில் மட்டுமே பிரச்னை உள்ளது. இதுவும் ஓரிரு நாளில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் அதிமுக தலைவர்கள் கடைசி நேரத்தில் கழகத்தை பிடித்து நெருக்குவதுபோல போனிலேயே பேசி முடித்து விட்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை