நீரில் மூழ்கிய நெற்பயிர்: சோகத்தில் பாகூர் பகுதி விவசாயிகள்
பாகூர் : பாகூர் பகுதியில் மழை நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள் வயலியே முளைத்ததால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
புதுச்சேரியின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில், நடப்பு சம்பா பருவத்தில் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பொன்னி, பொன்மணி, பி.பி.டி., உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்பட்டன. சில நாட்களுக்கு முன்பு வரை, பாகூர் பகுதியில் கன மழை பெய்தது.இதனால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், வயலில் சாய்ந்தன. வயலில் மழை நீர் தேங்கியதால், அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த முடியவில்லை. நீரில் மூழ்கிய நெற் கதிர்கள் முளைத்து ஒரு அடி உயரத்திற்கு வளர்ந்து விட்டது.
இதனால், விவசாயிகள் சோகத்தில் மூழ்கினர்.பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் கூறுகையில் ''தொடர் மழையால், புதுச்சேரியில் 8000 ஏக்கரில் நெற் பயிர்கள் பாதித்துள்ளது. மழை நீரில் மூழ்கிய நெல் மணிகள், வயலிலேயே முளைத்ததால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது வரை நிவார ணமோ, இழப்பீடோ அரசு அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
மத்திய, மாநில வங்கிகளில், விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அலட்சியதால், 3 ஆண்டுகளாக பயிர் காப்பீட்டின் இழப்பீடு தொகை புதுச்சேரி விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. புதுச்சேரி அரசு, மத்திய அரசை நம்பியுள்ளது.மத்திய அரசு தலையிட்டு, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், கடன்களை தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.''