உப்பு தண்ணீரை பயன்படுத்தும் அவலநிலை அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்: கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஓமசமுத்திரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் கடலையொட்டி அமைந்துள்ளதால் இங்கு நிலத்தடிநீர் உப்பு தண்ணீராக உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நத்தம் ஊராட்சியில் இருந்து பைப் லைன் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக ஓமசமுத்திரத்தில் உள்ள 5 தெருக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் உப்பு தண்ணீரை காய்ச்சி குடிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன்காரணமாக குழந்தைகள், முதியவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இதுவரை ஊராட்சி செயலாளர் நியமிக்கப்படாததால் புகார் செய்ய முடியவில்லை. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் செய்துள்ளனர். அவரும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஓமசமுத்திரம் சாலையில் திரண்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த கல்லூரில் இருந்து கோயம்பேடு செல்லும் மாநகர பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பாட்டிலில் பிடித்து வைத்திருந்த உப்பு தண்ணீரை காண்பிடித்து கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து ெசன்றனர்.
இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
.