திருத்தம் செய்ய நவ.18 வரை கால அவகாசம் வரைவு வாக்காளர் பட்டியல் நவ.25ல் வெளியீடு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருத்தம் செய்ய நவ.18 வரை கால அவகாசம் வரைவு வாக்காளர் பட்டியல் நவ.25ல் வெளியீடு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நவம்பர் 18ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம்’ செப்டம்பர் 1ம் ேததி முதல் 30ம் தேதி வரை நடந்தது. இந்த திட்டத்தின் மூலம் வாக்காளர் பட்டியலில் தவறான தகவல் இருந்தால், அதாவது பெயரில் எழுத்து பிழை, வயது, பாலினம் ஆகியவற்றில் தவறு இருந்தால் வாக்காளர்களே நேரடியாக ‘voters help line’’ என்ற செல்போன் செயலி மூலம் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

செல்போன் செயலி மூலம் திருத்தம் செய்தவர்களின் விண்ணப்பத்தை தேர்தல் அலுவலர்கள் அவரவர் வீடுகளுக்கே வந்து சரிபார்க்கும் பணியை மேற்கொள்வார்கள்.

அப்படி திருத்தம் செய்ய வரும்போது, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒன்றின் அசல் ஆவணத்தை அதிகாரிகளிடம் சரிபார்ப்புக்காக வழங்க வேண்டும். பின்னர் வாக்காளர் கூறிய தவறுகள் திருத்திக் கொள்ள முடியும்.

இதை தவிர்த்து, தமிழகம் முழுவதும் 8,095 பொது மையங்களிலும், 1,662 இ-சேவை மையங்களிலும், 97 வாக்காளர் சேவை மையங்களிலும் வாக்காளர்கள் சென்று திருத்தங்கள் செய்து கொள்ள முடியும்.

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது, கடந்த செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, மேலும் இரண்டு வாரம், அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, வாக்காளர் பட்டியலில், வாக்காளர்கள், அக்டோபர் 15ம் தேதி வரை, திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை பயன்படுத்தி கொண்டு ஏராளமானோர் மொபைல் ஆப் மூலமாகவும், பொது மையங்கள் மற்றும் இ சேவை மையங்கள் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தற்போது வரை 23 லட்சத்து 37 ஆயிரம் பேர் வரை  மொபைல் ஆப் மூலமாக திருத்தம் செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.



அதே போன்று பொது மையங்கள் மூலமாகவும் லட்சக்கணக்கானோர் திருத்தம் செய்துள்ளனர். தொடர்ந்து பலர் முகவரி மாற்றம், பெயர் உள்ளிட்ட திருத்தம் செய்ய வேண்டி உள்ளது.

இந்த நிலையில் பொதுமக்கள் திருத்தம் செய்ய கால அவகாசம் கேட்ட நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்ய கால அவகாசம் நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறும் போது, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய  செப்டம்பர் 30 ம் தேதியில் இருந்து அக்டோபர் 15ம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25ம் தேதி வெளியிடப்படும்’ என்றார்.


.

மூலக்கதை