மகிஷாசூரனை சம்ஹாரம் செய்தார் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகிஷாசூரனை சம்ஹாரம் செய்தார் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்

உடன்குடி: குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடந்த சூரசம்கார நிகழ்ச்சியில் முத்தாரம்மன், சூரனை சம்காரம் செய்தார். இந்த காட்சியை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இந்தாண்டு தசரா திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி 28ம் தேதி காளிபூஜை, சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி நடந்தது.

29ம் தேதி அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதியுலா, சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. பின்னர் விரதமிருந்து வேடமணியும் பக்தர்கள் காப்பு கட்டினர்.

திருவிழாவில் 10 நாட்களும் இரவில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா வரும் வைபவம் நடந்தது.

10ம் திருவிழாவான நேற்று காலை 10. 30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பு எழுந்தருளினார்.

அங்கு 12. 6 மணிக்கு முத்தாரம்மன், மகிஷாசூரனின் தன் தலையை முதலில் வெட்டினார். 12. 12க்கு சூரனின் சிங்க தலையையும் 12. 19க்கு எருமை தலையையும் 12. 21க்கு சேவல் தலையையும் கொய்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம்காளி, ஜெய்காளி என்று கோஷம் எழுப்பினர்.

சூரசம்ஹாரம் முடிந்தவுடன் இன்று அதிகாலை 1 மணி அளவில் கடற்கரை மேடையில் அம்மன் எழுந்தருளியதும் அபிஷேக ஆராதனை நடந்தது. 2 மணிக்கு அம்மனுக்கு சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பு சாந்தாபிஷேக ஆராதனையும், தொடர்ந்து திருத்தேரில் பவனி வந்து தேர் நிலையம் சென்றடைதலும் நடந்தது.

காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதியுலா புறப்படுதல், மாலை 4 மணிக்கு அம்மன் திருக்கோயில் வந்து சேர்தல், மாலை 4. 30 மணிக்கு காப்பு களைதல், நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 12ம் திருவிழாவான நாளை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், பாலாபிஷேகம் நடக்கிறது.

இதனிடையே காப்புக்கட்டி விரதம் இருந்து ஊர், ஊராக காணிக்கை வசூலித்த பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு காப்புகளை அவிழ்த்துக்கொண்டனர்.

.

மூலக்கதை