சுற்றித் திரியும், 'காளை'கள்; 'நெம்பி' எடுக்கும் போலீஸ்!

தினமலர்  தினமலர்
சுற்றித் திரியும், காளைகள்; நெம்பி எடுக்கும் போலீஸ்!

புழல் : ஊரடங்கு உத்தரவை மீறி ஊரை சுற்றுவோரை, லத்தியால் அடித்தால் பிரச்னையாகி விடுகிறது என்பதால், அவர்களை கட்டுப்படுத்த, போலீசார் புதுப்புது வகையாக நுாதன தண்டனைகளை எப்படி வழங்கலாம் என, தங்களது பள்ளி பருவ அனுபவங்களை செயல்படுத்துகின்றனர்.

'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, நாடெங்கும், 24ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளில், சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தப்படுகிறது. ஆனால், பலர் சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி, அலட்சியமாக ஊரை சுற்றி, பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களை மடக்கி பிடிக்கும் போலீசார், பல்வேறு நுாதன தண்டனைகளை வழங்கி, அறிவுரை கூறுகின்றனர். ஆனாலும், அவர்கள் அடங்குவதாக இல்லை. இதனால், விதிமீறுவோரை கட்டுப்படுத்த, போலீசார் தங்களின் பள்ளிப்பருவத்தில் அனுபவித்த தண்டனைகளை நினைவு கூர்ந்து, அதை அடங்காதவர்களுக்கு அளித்து வருகின்றனர்.

தோப்புக்கரணம், தவளை ஜம்பிங், அங்கப் பிரதட்சணம், நாற்காலி போல் உட்காருவது, கொரோனா குறித்து கேள்வி பதில் எழுதுவது, நெற்றியில் தலை எழுத்து, சுவாசப்பயிற்சி, இரு கையிலும் புத்தகங்களை சுமந்து தராசு தட்டு போல் வளைந்து நிற்பது என, பல்வேறு நுாதன தண்டனைகளை, இதுவரை பலருக்கும் வழங்கி உள்ளனர்.அதையும் மீறி ஊர் சுற்றுபவர்களை, ஏப்., 14ம் தேதி வரை எப்படி கட்டுப்படுத்துவது என, புதிய நுாதன தண்டனைகளை ஆலோசித்து வருகின்றனர்.

மூலக்கதை