குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கும்பகோணத்தில் 18ம் தேதி மாநாடு: முத்தரசன் பேட்டி
விழுப்புரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விழுப்புரத்தில் கூறியதாவது: டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்ற கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக கூறப்படும் 7 பேர் சிறையில் கால் நூற்றாண்டை கடந்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.
தமிழக அரசின் பொறுப்பற்ற செயலாகும். ஆளுநருக்கு அனுப்பிய மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று தமிழக அரசு தான் கேட்டு தெரிவிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை காரணம் காட்டி தமிழக அரசு இனியும் தப்பிக்க முடியாது. உடனடியாக அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்.
புதுச்சேரியிலும் இந்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வருக்கு நன்றியும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜனநாயகத்தை காப்பதற்காக, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்போம், ஜனநாயகத்தை காப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரணிகள் நடத்தப்பட உள்ளது. வரும் 18ம் தேதி கும்பகோணத்தில் மாநாடு நடக்கிறது.
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
வரும் பட்ஜெட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கவும் வேளாண் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திட்டங்களை அறிவிக்கவேண்டும். டிஎன்பிஸ்சி முறைகேட்டில் ஆளுங்கட்சியின் செல்வாக்கு இல்லாமல் ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை.
முக்கிய முதலைகள் கைது செய்யப்படவில்லை. இவ்வாறு கூறினார்.