டிக் டாக்கில் பழகிய இளம்பெண்ணை திருமணம் செய்து கணவன் ஓட்டம்: எஸ்பி.யிடம் மனைவி கதறல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிக் டாக்கில் பழகிய இளம்பெண்ணை திருமணம் செய்து கணவன் ஓட்டம்: எஸ்பி.யிடம் மனைவி கதறல்

கடலூர்: டிக்டாக் மூலம் பழகிய இளம்பெண்ணுடன் ஓடிய கணவனை மீட்டுத்தர வேண்டும் என்று எஸ்பியிடம் மனைவி புகார் கொடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (28).

இவரின் மனைவி சுகன்யா (25). இவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி திருமணம் நடந்தது.

தம்பதிக்கு 3 வயதில் தர்ணிகா என்ற மகள் உள்ளார். ராஜசேகருக்கு டிக்டாக் மூலம் பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது.

இதில் ஒரு பெண்ணை ராஜசேகர் திருமணமும் செய்து கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி தெரியவந்ததும் சுகன்யா அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில், சுகன்யா தனது கைக்குழந்தை மற்றும் உறவினர்களுடனும் நேற்று கடலூர் மாவட்ட எஸ். பி. ஸ்ரீஅபிநவிடம் ஒரு புகார் கொடுத்தார்.

அந்த புகாரில், ‘’என் கணவர் ராஜசேகர் டிக்டாக் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றின் மூலம் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்.

பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் டிக்டாக் படங்கள் எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது.

இதுபற்றி கணவனிடம் கேட்டபோது அவருக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டது. கணவன், மாமனார், மாமியார், நாத்தனார் என்னை அடித்து துன்புறுத்தினர்.

காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் செய்தேன். போலீசார் கணவரை அழைத்து விசாரணை நடத்தி இனிமேல் இதுபோல் நடந்துகொள்ளக்கூடாது என அறிவுரைக்கூறி அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவர் திருந்தவில்லை. தொடர்ந்து டிக்டாக் மூலம் பல பெண்களுடன் தொடர்பினை ஏற்படுத்தியவாறு இருந்தார்.

டிக்டாக் மூலம் அவருக்கு புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் என்னையும், என் குழந்தையும் தவிக்கவிட்டுவிட்டு அந்தப் பெண்ணுடன் ஓடி விட்டார்.

இதுபற்றி அறந்தாங்கி காவல்நிலைய போலீசார் என்னை தொடர்பு கொண்டனர்.

என் கணவன் ஒரு இளம்பெண்ணுடன் இருக்கும் வீடியோவை அனுப்பி கணவனை  பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது தான் என் கணவன் அந்த டிக்டாக் மூலம் பழகிய பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் நானும், என் குழந்தையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

இது சம்பந்தமாக காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் வாங்க மறுத்துவிட்டனர்.

ஆன்லைன் மூலம் புகார் மனு அளித்தேன். மேலும் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளேன்.

இதுவரை எனக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை. புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே இளம்பெண்ணுடன் சென்ற எனது கணவரை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை