காஞ்சிபுரத்தில் பரபரப்பு: 3 மாடி மெத்தை கடையில் தீ

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஞ்சிபுரத்தில் பரபரப்பு: 3 மாடி மெத்தை கடையில் தீ

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 3 மாடி மெத்தை கடையில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் சங்குசாபேட்டையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (52).

அதே பகுதியில் தலையணை, கார்ஷீட், மெத்தை, மேட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். 3 மாடிகள் கொண்டது.

கட்டிடத்தின் மேல் பகுதியில் குடோன் உள்ளது. இந்த கடையில் 6 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்றிரவு வழக்கம் போல வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். நள்ளிரவு 11 மணியளவில் திடீரென மேல் மாடியில் இருந்து குபுகுபுவென புகை வந்தது.

சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. 3 மாடிக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.



இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இன்று அதிகாலை வரை போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், பக்கத்து வீடுகளில் புகை மண்டலம் பரவியதால் பலர், வீட்டை விட்டு வெளியேறினர்.

இதற்கிடையில் தகவல் அறிந்து விஷ்ணு காஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு பதிவு செய்து, மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது நேற்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பட்டாசு வெடித்ததில் இந்த சம்பவம் நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை