தமிழகத்தில் 80 வயது கடந்த முதியோர்களுக்கு ஓய்வூதியம் மணியார்டர் மூலமாக வழங்க அரசு ஏற்பாடு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

தமிழகத்தில் 80 வயதை கடந்த முதியவர்களுக்கு ஓய்வூதியம் வீட்டிற்கு மணியார்டர் மூலமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. 

இது குறித்து தமிழக அரசு  வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:

வங்கிகளில் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும்போது கூட்ட நெரிசல் ஏற்படுதல் மற்றும் வயது முதிர்ந்த பயனாளிகளின் கைரேகை தேய்ந்த காரணத்தினால், அவர்கள் ஓய்வூதியம் பெறுதலில் சிரமங்களைத் தவிர்க்க, வயது முதிர்ந்த பயனாளிகளுக்கு அவரவர்களது வீட்டிற்கே சென்று ஓய்வூதிய தொகையினை வழங்க சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆய்வு கூட்டங்களில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது. 

இந்த நிலையில், கடந்த 23.4.2018 அன்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், 80 வயதினை கடந்து ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று ஓய்வூதிய தொகையினை வழங்கும் முறையினை மீண்டும் அஞ்சல் துறை மூலம் கொண்டு வர அறிவுறுத்தினார்கள். 

அதன்படி, தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 80 வயதை கடந்த 1,83,308 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ1000 வழங்கப்பட்டு வருகிறது. 

முதல்வரின் அறிவுரையின்படி வயது முதிர்ந்த பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பண அஞ்சல் (மணியார்டர்) மூலம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை