மதுரையில் மருத்துவ சேவை கழகம் முடக்கம்!: மருந்தாளுனர் சங்கம் குற்றச்சாட்டு
மதுரை;மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் அரசு மருத்துவ சேவை கழகம் ஊழியர்கள் பற்றாக்குறையால் முடங்கியுள்ளதாக மருந்தாளுனர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.மதுரை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ சேவை கழகத்தில் ஊழியர்களை நியமிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுனர் சங்கம் சார்பில் தொடர் முழுக்கப் போராட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற பின் சங்க தலைவர் பிரபாகரன் கூறியதாவது: சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகங்களில இருந்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருந்துகள் அனுப்பப்படுகிறது. மருந்தாளுனர் பற்றாக்குறையால் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. மதுரையில் அரசு மருத்துவ சேவை கழகத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு இரண்டு மருந்தாளுனர்கள் மட்டுமே உள்ளனர்.
அதிக பணிச்சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மருத்துவ சேவை கழகம் முடங்கும் நிலையில் உள்ளது.மாநிலத்தில் பத்தாயிரம் பணியிடங்களில் மூவாயிரம் பேர் மட்டுமே உள்ளனர். நெடுஞ்சாலைகளில் நடமாடும் மருத்துவமனைகளில் மருந்தாளுனர் பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.