தேர்தல் பணியில் குழந்தைகள் எச்சரிக்கை!

தினமலர்  தினமலர்
தேர்தல் பணியில் குழந்தைகள் எச்சரிக்கை!

திருப்பூர்:லோக்சபா தேர்தல் தொடர்பான பணிகளில், 18 வயதுக்கு உட்பட்ட, குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.லோக்சபா தேர்தலுக்கு, 26ம் தேதியுடன் வேட்பு மனுத்தாக்கல் முடிந்து, 29ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
அதற்கு பிறகு, பிரசார களம் சூடுபிடிக்கும்.தமிழகத்தில், 18 நாட்கள் மட்டுமே, தீவிர பிரசாரம் மேற்கொள்ள இயலும் என்பதால், தேர்தல் பணிகளை உரியகாலத்தில் முடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில், ஆசிரியர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர் என, ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் பயன்படுத்தப்படுகிறது.பதட்டமான சாவடிகள் கண்காணிக்க, 'வெப் கேமரா', வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு, தனியாரும் பங்கேற்கின்றனர். கல்லுாரி மாணவ, மாணவியர், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தேசிய குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன், தேர்தல் கமிஷன் சார்பில், '18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படக்கூடாது' என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினரோ, 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை, தேர்தல் பணிக்கு பயன்படுத்தக்கூடாது. தேர்தல் பிரிவினர், தீவிரமாக கண்காணித்து, இந்த உத்தரவை உறுதிசெய்துகொள்ள வேண்டும். அவ்வாறு, குழந்தை தொழிலாளர்களை, தேர்தல் பணிக்கு பயன்படுத்துவது தெரியவந்தால், தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.கண்காணித்து தடுக்க தவறிய குற்றத்துக்காக, சம்பந்தப்பட்ட தேர்தல் அலுலவலர் மீது, துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை