திருச்செந்தூர் முருகன் கோயிலில் மண்டபம் இடிந்து பக்தர் சாவு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெளிப்பிரகாரம் மண்டபம் இடிந்து விழுந்து பக்தர் பலியானார். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் வெளிப்பிரகாரம் வழியாக பக்தர்கள் வலம் வந்து கடலில் நீராடச் செல்வர். பின்னர் கடலில் குளித்து முடித்து விட்டு சுவாமி தரிசனம் செய்ய செல்வர். சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளிப்பிரகார சுவர் அருகே உள்ள நுழைவு வாயில் வழியாக வெளியே வருவது வழக்கம்.
இன்று காலை வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யக் கோயிலுக்கு வந்தனர்.
அப்போது வெளிப்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடிந்து கீழே விழுந்தது. அதை தாங்கிக் கொண்டிருந்த தூண்கள் அந்தரத்தில் தொங்கின. இந்த இடிபாடுகளில் சிக்கி பக்தர் ஒருவர் பலியானார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இடிபாடுகளை அகற்றி வேறு யாரும் சிக்கியுள்ளனரா? என தேடி வருகின்றனர்.