தவிக்கவிடுறாங்களே: மருத்துவமனைகளுக்கு ரூ.பல கோடி பாக்கி:சிகிச்சைக்கு வழியின்றி நோயாளிகள் தவிப்பு
சிவகாசி;இ.எஸ்.ஐ.,கார்ப்பரேஷன் வழங்கிய தொகையினை ,மருத்துவமனைக்கு,மாநில அரசு வழங்காது பாக்கி வைத்துள்ளதால், உயர் சிகிச்சை பெற முடியாதுநோயாளிகள் தவிக்கின்றனர்.இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் பெரும்பாலானவை மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன. பல்வேறு மருத்துவக் கல்லுாரி, அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பந்த அடிப்படையில் , அதிதீவிர நோய் சிகிச்சை, சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு சிறப்பு வசதிகளை செய்துள்ளது.
இதன் செலவினை,மாநில அரசிற்கு இ.எஸ். ஐ., கார்ப்பரேஷன் கொடுக்கிறது. மதுரை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே சூப்பர் ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனைகளில் ,இ.எஸ்.ஐ., ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது, இ.எஸ்.ஐ., வழங்கிய தொகையினை , ஒப்பந்தம் செய்த தனியார் மருத்துவனைகளுக்கு,மாநில அரசு வழங்காது,ரூ. பல கோடி பாக்கி வைத்துள்ளது. இதனால் இ.எஸ்.ஐ., கார்டுடன் வரும் விண்ணப்பத்தை, தனியார் மருத்துவமனைகள் நிராகரிக்கின்றன. நவீன சிகிச்சை பெற முடியாது நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
பெரும் பாதிப்பு
சிவகாசியில் இ.எஸ்.ஐ., அங்கீகரித்த மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை மட்டுமே செய்ய முடியும். இதர நோய்களுக்கு மதுரை மருத்துவமனை செல்ல வேண்டும். இங்கு நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். அரசின் ஒழுங்கற்ற நிர்வாகத்தால் தொழிலாளிகள் பாதிக்கின்றனர்.- நடராஜமூர்த்தி, இ.எஸ்.ஐ., ஆலோசகர்,சிவகாசி.