மீண்டும் பரோல் கோரி சசிகலா மனு!

என் தமிழ்  என் தமிழ்
மீண்டும் பரோல் கோரி சசிகலா மனு!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா பரோல் கோரி மீண்டும் மனு அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில், சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்காக சென்னை புறநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், கணவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு 15 நாள்கள் பரோல் அளிக்கக் கோரி கர்நாடகச் சிறைத்துறை நிர்வாகத்திடம் சசிகலா விண்ணப்பித்தார்.ஆனால், நடராஜனின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி தொழில்நுட்பக் காரணங்களுக்காக சசிகலாவின் பரோல் மனுவைச் சிறைத்துறை நிர்வாகம் நிராகரித்தது. கூடுதல் ஆவணங்களுடன் புதிய பரோல் மனுவைத் தாக்கல் செய்யவும் சசிகலாவுக்குச் சிறைத்துறை அறிவுறுத்தியது. இந்தநிலையில் கணவர் நடராசனின் உடல்நிலையைக் குறித்த விரிவான மருத்துவ அறிக்கையுடன், 15 நாள்கள் பரோல் அளிக்கக் கோரி சசிகலா மீண்டும் மனு அளித்துள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக் கண்காணிப்பாளர் சோமசேகரிடம் அவர் மனு அளித்துள்ளார்.

மூலக்கதை