ஜெயலலிதா மரணத்தில் மர்மம்; அப்போலோ டாக்டர் குற்றச்சாட்டு - ஓபிஎஸ்சை சந்தித்த பின் பேட்டி
சென்னை- ஓபிஎஸ்சை சந்தித்த அப்போலோ டாக்டர், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அப்போலோ மருத்துவமனையில் டாக்டராக இருந்தவர் சீதா. இவர், சில நாட்களுக்கு முன் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவைச் சந்தித்துப் பேசினார்.
அதைத் தொடர்ந்து இன்று காலையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு வந்தார். அங்கு, பன்னீர்செல்வத்தைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி ஒரு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். சாதாரண பொதுமக்களில் ஒருவரை அழைத்து வந்தால், எப்படி கூட்டி வருவார்களோ அப்படித்தான் ஜெயலலிதாவையும் அழைத்து வந்தனர்.
மருத்துவமனையில் டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவர் சுயநினைவில்லாமல்தான் இருந்தார்.
அவருடன் ரத்த உறவினர்கள் யாரும் வரவில்லை. அவருடன் தங்கும் நிலையில் யாரும் வரவில்லை.
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு, வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. டாக்டர்களைக் கூட அனுமதிக்கவில்லை.
இதனால் அவரது மரணத்தில் மர்மம் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
அப்போதுதான் உண்மை தெரியும்.
இவ்வாறு டாக்டர் சீதா கூறினார்.