அதிமுக உடையக் கூடாது.. சசிக்கு எம்ஜிஆர் வளர்ப்பு மகள் சுதா வேண்டுகோள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதிமுக உடையக் கூடாது.. சசிக்கு எம்ஜிஆர் வளர்ப்பு மகள் சுதா வேண்டுகோள்

சென்னை: எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று எம்ஜிஆர் உறவினரான சுதா தெரிவித்துள்ளார். மேலும், அவரால் உருவாக்கப்பட்ட கட்சி உடையக் கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை ராமாபுரத்தில் சுதா செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சசிகலா அதிமுகவின் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரை நான் ஆதரிக்கிறேன். அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு அவரை அழைத்திருக்கிறோம். அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது. அவ்வளவு எளிதாக எந்த உண்மையையும் மறைத்துவிட முடியாது. ஊடகங்களும் அப்படி எளிதாக விட்டு விடாது. எனவே, எங்களுக்கு மரணத்தில் எந்த சந்தேகமும் கிடையாது.

இந்தியா ஜனநாயக நாடு. இங்கு யாரும் அரசியலுக்கு வரலாம். தீபாவும் அரசியலுக்கு வரலாம். நான் வேண்டிக்கொள்வது ஒன்றுதான். எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி அதிமுக. அது உடையக் கூடாது. அதேபோன்று அவரது இரட்டை இலை சின்னமும் நீடிக்க வேண்டும். எம்ஜிஆரின் பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்று சுதா தெரிவித்தார்.

மூலக்கதை