'ஸ்மார்ட் சிட்டி' திட்ட செயலாக்கத்தில்...மக்கள் ஏக்கம்; மாநகராட்சி தூக்கம்! ஆலோசனைகளில் காலம் தள்ளும் தமிழக அரசு!

தினமலர்  தினமலர்
ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலாக்கத்தில்...மக்கள் ஏக்கம்; மாநகராட்சி தூக்கம்! ஆலோசனைகளில் காலம் தள்ளும் தமிழக அரசு!


'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் செயலாக்கம் தொடர்பாக, கோவை மாநகராட்சியில் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. மீண்டும் மீண்டும் ஆலோசனைகளைச் செய்வதைத் தவிர்த்து, பணிகளைத் துவக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, வலுத்துள்ளது.
மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை தேர்வு செய்யப்பட்டு, இரு ஆண்டுகளாகி விட்டது. இந்த திட்டத்தில், மத்திய - மாநில அரசின் நிதி பங்களிப்புடன், செயல்படுத்த கோவை மாநகராட்சி நிர்வாகம், பல்வேறு திட்டங்களைத் தீட்டியுள்ளது. இதில், தனது பங்களிப்பாக, மத்திய அரசு, ரூ.200 கோடி வழங்கியுள்ளது. கோவை நகரிலுள்ள எட்டு குளங்களை மேம்படுத்துவதே, இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகவுள்ளது.
எட்டு திட்டங்கள்...எட்டு குளங்களை மேம்படுத்தி, மோட்டார் இல்லாத வாகனங்களில் செல்லும் வகையில், இந்த குளங்களுக்கு இடையில் இணைப்பு சாலை ஏற்படுத்துதல், 'ஸ்மார்ட்' பள்ளி உருவாக்குதல், 'ஸ்மார்ட்' குப்பைத்தொட்டி, நவீன சாலையோர இருக்கைகள் உள்ளிட்ட எட்டு விதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இத்திட்டங்கள் தொடர்பான நிர்வாகக்குழு ஆலோசனை கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன தலைவர் டேவிதார் தலைமை வகித்தார். நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், முதற்கட்டமாக நிறைவேற்றப்படவுள்ள சில திட்டங்கள் குறித்து, மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன் விளக்கினார். அதில், சூரிய ஒளியில் ஒளிரும் நவீன சாலையோர இருக்கைகள்; கவுண்டம்பாளையத்தில் சூரிய ஒளி மின் திட்ட மையம்; 'சென்சார்' குப்பை தொட்டி; பள்ளி வளாகத்தை நவீனப்படுத்துதுல்; சணல் பை தயாரிக்கும் திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.
அடுத்த கட்டமாக, எட்டு குளங்களை ஒட்டியுள்ள வார்டுகளில், இயற்கை எழிலுடன் கூடிய பூங்கா அமைத்தல், பசுமை தோட்டம், மருத்துவ குணமுள்ள மரக்கன்று வளர்ப்பதற்கான பூங்கா அமைத்தல், ஒரே கம்பத்தில் எல்.இ.டி., தெருவிளக்கு, கண்காணிப்பு கேமரா அமைக்கும் திட்டங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி கோர உள்ளதாக, கமிஷனர் தெரிவித்தார். அதன்பின், திட்டம் குறித்து, பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
சுத்திகரிப்பு அவசியம்'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் பேசுகையில், ''குளங்களில் சாக்கடை கழிவு நீர் நேரடியாக கலக்கிறது. சுற்றுச்சூழலும், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக பாதிக்கிறது. சுத்திகரிப்பு மையம் அமைத்து, சுத்திகரித்த பின்பே சேமிக்க வேண்டும். குளக்கரையில் கட்டட கழிவு கொட்டுவது; மாடுகளை கட்டுவது; இரவு நேரங்களில் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டுவது போன்ற செயல்கள் நடக்கின்றன. அவற்றை உடனடியாக தடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றி, குளங்களை மீட்டெடுக்க வேண்டும்,'' என்றார்.
'ராக்' அமைப்பு தலைவர் சுவாமிநாதன் பேசுகையில், ''மக்களுக்கு என்ன தேவை என புரிந்து செயல்பட வேண்டும். கோவையில் பொது காரியங்களை முன்னெடுத்துச் செய்ய தொழில்துறையினர் ஒற்றுமையாக இணைந்து பணிபுரிவது வாடிக்கை. குளங்களை மேம்படுத்த வேண்டுமெனில், அதில் ஈடுபாடு உள்ள தொழில்துறையினரை உறுப்பினராக சேர்க்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மையில் யாருக்கு விருப்பம் இருக்கிறதோ, அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இதற்கு தொழில்துறையை சேர்ந்தவர்களை அழைத்து ஆலோசிக்க வேண்டும்,'' என்றார்.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவையைத் தேர்வு செய்து, இரு ஆண்டுகளாகி விட்டது. மத்திய அரசு, தனது முதற்கட்ட பங்களிப்பாக, 200 கோடி ரூபாயையும் வழங்கிவிட்டது. மாநில அரசின் பங்காக, 200 கோடியைத் தந்து, பணிகளைத் துவக்கியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல், ஆலோசனைக் கூட்டங்களை மட்டும் தமிழக அரசு நடத்தி வருகிறது. பணிகளை விரைவில் துவக்க வேண்டுமென்பதே கோவை மக்களின் எதிர்பார்ப்பும், ஏக்கமும்.
கழிவுநீர் கலக்காதீர்சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழுவை சேர்ந்த சலீம் பேசுகையில், ''குளங்களில் கழிவு நீரை கலக்காதீர். உக்கடம் குளக்கரையில் மாடுகள் கட்டப்படுகின்றன. டூ வீலர்கள் நிறுத்தப்படுகின்றன. குளத்தில் தண்ணீரை மட்டும் தேக்க வேண்டும். கட்டடம் கட்டுவது உள்ளிட்ட பணிகளை குளத்துக்கு வெளியே செய்ய வேண்டும். குளத்துக்குள் எவ்வித கட்டுமான பணியையும் செய்யக்கூடாது,'' என்றார்.
காற்றின் மாசு தெரியும்!கோவை நகரில் காற்று மாசு அளவைக் கண்காணிக்க, 30 இடங்களில், 'கார்பன் அளவிடும் கருவி' பொருத்த முடிவு செய்யப்பட்டது. சோதனை முறையில், உக்கடம் குளத்தில் வைத்துள்ள இக்கருவியின் செயல்பாடு, ஆர்.எஸ்.புரத்தில், ரூ.1.5 கோடியில் அமைக்கப்படும் மாதிரிச் சாலை, புதுப்பிக்கப்படும் கலையரங்கம் ஆகியவற்றை, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார்.


-நமது நிருபர்-

மூலக்கதை